மோடி அமைச்சரவை விரிவாக்கத்தில் தென் மாநிலங்கள் புறக்கணிப்பு- வீரமணி
இன்றைய மத்திய அமைச்சரவையில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளது என்று ‘தினமலரே' சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் தென் மாநிலங்களிலிருந்து இடம் பெற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 27, மோடி அமைச்சரவையில் இடம் பெற்றவர்களோ வெறும் 8 பேர்கள்தான். இதையும் தென் மாநில மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காலையில் கட்சியில் சேர்ந்து மதியம் மத்திய அமைச்சர் பதவி, பரிசாகத் தரப்பட்டுள்ளது. சொந்தக் கட்சிக்குத் துரோகம் செய்தால் இந்தப் பரிசு என்றால், அது அரசியல் பொது வாழ்வில் எத்தகைய ஒழுக்கம் காப்பாற்றப்படுகிறது என்பது நடு நிலையாளர்களுக்குத்தான் வெளிச்சம்.
பிரதமர் அவரது விருப்பப்படி அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்க உரிமை உடையவர்தான் என்றாலும்கூட, இப்படி சமூகநீதி - சம வாய்ப்பு காற்றில் பறக்க விடப்படலாமா?
ஒவ்வொரு அமைச்சரின் சொத்துப் பட்டியல் மதிப்பும் சில நாளேடுகளில் வெளி வந்துள்ளன.
எல்லாம் கோடீசுவரர்கள்தான்! ரூ.4 லட்சம் சொத்து என்று ஒரே ஒரு காவிச் சாமியாரிணி அம்மையாரின் சொத்தாகத்தான் காட்டப்பட்டுள்ளது.
மற்றவை எல்லாம் குறைந்தபட்சம் ரூ.1.5 கோடியில் தொடங்கி மேலே சென்றுள்ளது. எனவே வர்க்கப் படியும், வருணப்படியும் (பெரிதும் பார்ப்பனர் மற்றும் "உயர்ஜாதியினர் தான், பணக்காரர்கள்தான் இந்த 66 அரசியல் நாயன்மார்களில்" இடம் பெற்றுள்ளனர்) ஹிந்துக்களே 63 சதவிகிதம் இடம் பெற்றுள்ளனர் என்று ஒரு தொலைக்காட்சி தகவல் கூறியது!
இந்த வித்தைகளாலும், வீராவேச வசன உறுதிமொழிகளாலும் எவ்வளவு காலம்தான் மக்கள் ஏமாறுவார்களோ தெரியவில்லை.
மாற்றம் வரும் என்று இணையத்தினைப் பார்த்து, வாக்களித்த இளைஞர் கூட்டம் - இப்போது மெல்ல மெல்ல விழித்துப் பார்த்து, வேதனையில் வீழ்ந்துள்ளது.
மாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு கிடைத்தது மாற்றம் அல்ல; ஏமாற்றமே!
மகளிர் உரிமை - மகளிருக்கு வாய்ப்பு என்பதுகூட எத்தனை விழுக்காடு 66 பேர்களில் - அதுவும்கூட உயர் ஜாதி வருணத்தவர்தான்!
பொருளாதாரத்தில் கண்ட மாற்றம் தான் என்ன? ‘கார்ப்பரேட்' முதலாளிகளின் ஆதிக்க வளர்ச்சிதான்; பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் சிறிதும் லஜ்ஜையின்றி, விற்கத் தயார் என்று கூறுகிறார் நிதி அமைச்சர். இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது பிஜேபி அரசு.
1. தனியார் முதலாளிகளைக் கொழுக்க வைப்பது,
2. இடஒதுக்கீட்டினை ஒழித்துக் கட்ட இதன் மூலம் வாய்ப்பு.
புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு கி. வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications