கலாஷேத்ரா வழக்கு.."போலீஸ் தரப்பு வைத்த முக்கிய பாயிண்ட்" ஹரி பத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி!
சென்னை: கலாஷேத்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமீன் மனு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை திருவான்மியூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளை நிறுவனம் உள்ளது. 1936-ம் ஆண்டு ருக்மணிதேவி அருண்டேல் என்பவரால் தொடங்கப்பட்டது. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட நடனம், இசை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் சிலர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாணவ மாணவிகள் கடந்த மார்ச் 30 ஆம் தேதி கல்லூரி வளாகத்திற்கு உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே, முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த புகாரில்தான் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தியது மட்டுமின்றி ஜாதி ரீதியாகவும் கடுமையாக தாக்கி வந்துள்ளார் ஹரி பத்மன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அவரை ஜாமீனில் விட போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை ஜாமீனில் விட்டால், சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்றும், விசாரணை இன்னும் முடிவடையவில்லை, என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் தரப்பு வாதத்தை ஏற்று ஹரிபத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications