நிற்காத மரணம்.. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி 55 ஆக உயர்வு.. 100 பேருக்கு தொடர் சிகிச்சை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று இரவு வரை 52 பேர் பலியான நிலையில் இன்று உயிரிழப்பு 55 ஆக அதிகரித்தது. மேலும் 100க்கும் அதிகமானவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது. இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மெத்தனால் கலந்த சாராயத்தை அவர்கள் பருகியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

திடீர் வாந்தி, மயக்கம், வயிற்றெச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 150க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து ஒவ்வொருவராக இறந்து வருகின்றனர். நேற்று இரவு வரை மொத்தம் 52 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
அதாவது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், கல்யாண சுந்தரம் உள்பட 3 பேர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலருக்கு கண்பார்வை பறிப்போய் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சையில் இருப்பவர்களை காப்பாற்ற தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு சிகிச்சை வழங்கும் நடைமுறையை விரைவுப்படுத்தி வருகிறார். அதோடு கருணாபுரத்தில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறையினர் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications