தொடரும் கள்ளச்சாராய பலி.. கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலையில் பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 140க்கும் அதிகமானவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 18 ம் தேதி கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர்.

இந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூலி வேலைக்கு சென்று ஏழ்மை நிலையில் உள்ளனர். இதனால் அவர்கள் டாஸ்மாக் மதுபானத்துக்கு பதில் பாக்கெட்டுகளில் ரூ.50, ரூ.60க்கு விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். இந்த சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது.
இதுதான் அவர்களின் உடல் நலப்பாதிப்புக்கு முக்கிய காரணமாகும். இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் தொடர்ந்து பலரும் பலியாகி வருகின்றனர். நேற்று வரை மொத்தம் 60 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் தான் இன்று காலையில் பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. அதாவது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏசுதாஸ் என்பவர் இன்று காலையில் பலியானார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பலியாகி உள்ளார். பலியான ஏசுதாசுக்கு வயது 35 ஆகிறது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை பொறுத்தமட்டில் தீவிர சிகிச்சைக்காக மொத்தம் 20 பேர் வரை அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது வரை 4 பேர் பலியாகி உள்ள நிலையில் 6 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் 10 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததாக மொத்தம் 140க்கும் அதிகமானவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications