தண்டவாளத்தில் அடுத்தடுத்து தலையை வைத்த 2 பேர்.. கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் பகீர்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் நடந்த 2 சம்பவம் பெரும் அதிர்வலையை அப்பகுதி மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான விசாரணையை கள்ளக்குறிச்சி ரயில்வே போலீசாரும் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது ரபிக்.. இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் உளுந்தூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து கொண்டதாக தெரிகிறது.

திருச்சி மார்க்கம்: அப்போது சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக சென்ற ரயில், முகமது ரபீக் உடல் மீது ஏறி இறங்கியது.. இதில், தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார். தண்டவாளத்தில் தலையும், உடலும் தனித்தனியாக கிடப்பதாக, நேற்று காலை விருத்தாச்சலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் சென்றதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.
அப்போதுதான், முகமது ரபீக் தற்கொலை செய்து கொண்ட இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலையில், இன்னொரு சடலம் கிடப்பதை கண்டு ரயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.. ஆனால், இவர் யார்? எந்த ஊரை சோ்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
அதே தண்டவாளம்: ஆனால் இவரும், அதே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்கலாம் என்றும், அந்த நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக சென்ற இன்னொரு ரயில், அவர் மீது மோதி இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. இவரது தலையும் தண்டவாளத்தில் தலைதுண்டாகி கிடந்ததாம்.
2 நபர்களும், ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து தலையை வைத்து படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கோணத்தில் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
என்ன காரணம்: இதில் உயிரிழந்த மற்றொரு நபர் குறித்த அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது. இவரும் கள்ளக்குறிச்சி நகர பகுதியை சேர்ந்த 60 வயது செல்வம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல, உயிரிழந்த கள்ளக்குறிச்சி நகர பகுதியை சேர்ந்த முகமது ரபிக் -க்கு 50 வயதாகிறது.. டெய்லரிங் மற்றும் எம்பிராய்டிங் வேலை செய்து வந்தவராம்.. மனைவி, 3 பிள்ளைகளும் இருக்கிறார்கள்..
ஆனால், 2 நபர்களும் தற்கொலைதான் செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். ஒரே தண்டவாளத்தில் படுத்து 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications