மனிதநேயம் இல்லா ஹவுஸ் ஓனர்.. ரோட்டில் மகனுக்கு இறுதி சடங்கு செய்த தாய்.. கள்ளக்குறிச்சி கண்ணீர் கதை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவரின் உடலை வீட்டில் வைத்து இறுதி சடங்கு செய்ய வாடகை வீட்டின் உரிமையாளர் அனுமதி மறுத்தார். இதனால் மகனை பறிகொடுத்த தாய் தனது உறவினர்களுடன் மகனுக்கு நடுரோட்டில் இறுதி சடங்கு செய்தது துயரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிருக்கு போராடி வருபவர்களை காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் உடனடியாக கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்துள்ளது. தற்போதைய சூழலில் சிலரின் உடல்நலம் இன்னும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் 21 பேரின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து கொண்டு வரப்படும் உடல்களுக்கு உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் இறந்த மகனின் உடலுக்கு வீட்டில் வைத்து இறுதி சடங்கு செய்து வைக்க வீட்டு உரிமையாளர் அனுமதிக்காத துயர சம்பவம் நடந்துள்ளது. அதாவது மோகன் - புஷ்பா தம்பதியின் மூத்த மகன் மனோஜ் குமார். பூக்கடையில் வேலை செய்து வந்தார். இந்த தம்பதியின் இளைய மகன் ஏற்கனவே இறந்த நிலையில் மோகனும் காலமாகி உள்ளார். இதனால் புஷ்பா, மூத்த மகன் மனோஜ் குமாருடன் வசித்து வந்தார்.

இவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இதனால் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் கள்ளச்சாராயம் குடித்து மனோஜ் குமார் பலியானார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் இறுதி சடங்கு செய்ய வாடகை வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
அப்போது வீட்டு உரிமையாளர் வீட்டில் வைத்து இறுதி சடங்கு செய்ய அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து புஷ்பா தனது உறவினர்களுடன் சேர்ந்து மகனின் உடலை நடுரோட்டில் வைத்து இறுதி சடங்கு செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் இன்னும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications