கள்ளக்குறிச்சி விவகாரம்: வாட்ஸ்ஆப் மூலம் போராட்டத்திற்கு அழைப்பு-சேலத்தில் போலீசார் குவிப்பு!
சேலம் : கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக, சேலம் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்த வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அழைப்பு விடுத்த இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில், தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், பெரு பூதாகரமாக மாறியுள்ளது. மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் பெற்றோரும், பொதுமக்களும் பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பள்ளி முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டதோடு, பேருந்து உள்ளிட்ட வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.

நிலைமை கைமீறி சென்றதால் காவல் துறையினர் துப்பாக்கிச்சுடு நடத்தினர். அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதனிடையே, வாட்ஸ்அப் குழு அமைத்து, இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் அடையாளம் கண்டு, அவதூறு செய்திகளை பரப்பி வரும் இளைஞர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில், சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையம் முன்பாக போராட்டம் நடத்த வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பெயரில் விசாரணை நடத்தியபோது, சேலம் அரியனூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பயின்ற வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த மாணவரை, ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்ட சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்திற்கு, சேலம் மாநகர துணை ஆணையாளர் லாவண்யா தலைமையில் 3 உதவி ஆணையாளர்கள் மற்றும் 150 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆங்காங்கே போராட்டம் நடத்த வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு வரும் சம்பவங்கள், காவல்துறைக்கு கடும் சவாலாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications