கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் மாணவியின் தாய்மாமா கைது.. விசாரணைக்கு ஆஜராகாததால் அதிரடி!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில், மாணவியின் தாய்மாமா செந்தில் முருகனை சிறப்பு புலனாய்வு போலீசார் சென்னையில் இன்று கைது செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவரை இன்று கைது செய்து கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா, கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் கூறப்பட்டது.

2022 ஜூலை 17 ஆம் தேதி மாணவி மரணத்துக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் எனக் கூறி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் போராட்டக்காரர்கள், பள்ளிக்குள் நுழைந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்ததுடன், பொருட்களையும் சூறையாடினர். இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ ஆதாரங்களை கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் ஏராளமானோரை கைது செய்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மாணவி மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. வாட்ஸ் அப் குழுக்களை அமைத்து அதில் உறுப்பினர்களை சேர்த்து கலவரத்தை தூண்டும் வகையில் தகவல் மற்றும் கருத்துக்களை பதிவிட்ட நபர்கள், யூட்யூபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ந்து கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் மனு செய்து ஜாமீன் பெற்று வெளியில் வந்தனர்.
இந்நிலையில், கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில், மாணவியின் தாய்மாமா செந்தில் முருகனை சிறப்பு புலனாய்வு போலீசார் சென்னையில் இன்று கைது செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவரை இன்று கைது செய்து கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications