என்ன ஆச்சு கமல் சார்? "மய்யம்" கொண்ட "புயல்" எங்கே.. மக்கள் என்ன நினைக்க ஆரம்பிச்சிருக்காங்க பாருங்க
சட்டசபை தேர்தலுக்கு துரிதமாக தயாராகிறது மக்கள் நீதி மய்யம்
சென்னை: இடைத்தேர்தலிலும் போட்டியில்லை... உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியில்லை.. ஸ்டிரைட்டாக சட்டசபை தேர்தலை நோக்கி கமலின் மய்யம் வேகமாக நகர தொடங்கி உள்ளது.. அதற்கான வேலைகளும் ஆரம்பமாகி உள்ள நிலையில், "கமல்ஹாசன் ஒரு அரசியல் தலைவராக ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறாரா"என்ற கேள்வியும் ஆர்வமாகவே நமக்கு எழ தொடங்கி உள்ளது!!
ஆளுமை இல்லாத வெற்றிடம், பல்வேறு அரசியல் தத்தளிப்புகளுக்கு நடுவில்தான் அரசியல் களம்புகுந்தார் கமல்ஹாசன்.. ட்விட்டரில் கருத்துக்களையும், கண்டனங்களையும் பதிவிட்டு வந்த கமல், கட்சியை ஆரம்பித்தது எதிர்பாராத ஒன்றுதான்!
கமலின் அரசியல் வருகை ஆரம்பம் முதல் இன்றுவரை விமர்சிக்கப்பட்டு வருகிறது.. கட்சி தொடங்கிய இந்த 2 ஆண்டில் கமலின் சாதனைகள் எதுவும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அமுங்கி, புதைந்து கிடந்த கிராம சபையை புதுப்பித்தார்.. டெக்னாலஜி வளர்ந்தபிறகு கிராம சபை கூட்டமெல்லாம் அவசியம்தானா என்ற கேள்விகள் எழுந்தாலும், கிராம சபை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்தார்.

கிராம சபை கூட்டங்கள்
மாதிரி கூட்டங்களை நடத்தி அதில் கலந்துகொண்டு விழிப்புணர்வு தந்தார்.. மய்ய உறுப்பினர்கள் தீயாக வேலை செய்து வருகின்றனர்.. மக்கள் பிரச்சனைகளை முன்வந்து கேட்டு சத்தமில்லாமல் உதவுகிறார்கள்.. இதை மறுக்க முடியாது... இதன் பலன்தான் கடந்த எம்பி தேர்தலில் சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்று தந்தது.. ஆனால் ஒரு கட்சி வளர்ச்சிக்கு இது மட்டும் போதுமா? என தெரியவில்லை.

போட்டி
கிராமசபை கூட்டங்களில் நிறைய ஆர்வம் காட்டி வந்ததால் உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அதையும் புறக்கணித்துவிட்டார். அடுத்த கட்டமாக 2021-ல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை நோக்கி வியூகம் அமைத்து வருகிறார்... சட்டமன்ற தேர்தலே இலக்கு என்றும் சொல்கிறார்.. அதனால்தான் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடவில்லை.. இப்போது முழு கவனத்தையும் சட்டசபை தேர்தலுக்கு மட்டுமே செலுத்த இருப்பதாக தெரிகிறது.

கேள்வி
அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க தயாராகி வருகிறார் என்றும் சொல்கிறார்கள். அப்படியானால், கமல் சந்திக்க போகும் சட்டசபை தேர்தல் எப்படி இருக்கும்? நிச்சயம் மாற்றத்தை, தாக்கத்தை தருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. இதைதான் நாம் ஒரு கேள்வியாக வாசகர்களிடம் வைத்திருந்தோம்.. இந்த கருத்து கணிப்புக்கான ரிசல்ட் சற்று அதிர்ச்சியாகவே உள்ளது.. "கமல்ஹாசன் ஒரு அரசியல் தலைவராக ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறாரா" என்பதுதான் கேள்வி.

வாக்கு சதவீதம்
"ஆம்" என்று 15.84 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. "இல்லை" என்று 40.18 சதவீதம் பேரும், "பரவாயில்லை" என்று 6.16 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "முன்னாடி மாதிரி இல்லை" என 12.32 சதவீதமும், "சுணங்கிவிட்டார்" என 14.37 சதவீதமும், "தேர்தலின்போது பார்க்கலாம்" என 11.14 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

எதிர்பார்ப்பு
எடுத்த எடுப்பிலேயே 40.18 சதவீதம் பேர் எதிர்மறையாக வாக்கினை செலுத்திவிட்டனர்.. "முன்னாடி மாதிரி இல்லை, சுணங்கிவிட்டார்" என்ற இரு ஆப்ஷன்களையும் நாம் ஒரே மாதிரியாகவே கணக்கில் கொள்ளலாம்.. ஏனென்றால், இவர்கள்தான் கமலிடம் நிறைய எதிர்பார்த்தவர்கள் போலும்.. என்ன எதிர்பார்த்தார்களோ அது இப்போது கமலிடம் குறைந்துள்ளதாகவே கருதுகிறார்கள்.
Recommended Video

நிறைய நம்புகிறார்கள்
கமலின் இந்த அரசியல் சுணக்கத்திற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? தீவிர களப்பணியில் இறங்காமல் பிக்பாஸ் போன்ற நிகழ்வுகளில் பங்கெடுத்ததா? அல்லது கமலின் பூடக பேச்சு எங்கோ போய் சிக்கி நின்று, மக்களை சரியாக சென்றடையாமல் தடம் மாறி விடுகிறதா? அல்லது நண்பர் ரஜினியை இதுவரை பெரியார் விஷயத்துக்கு கண்டிக்காமல் இருப்பதாலா? இதில் என்ன, எங்கு தடை என தெரியவில்லை. ஆனால் கமல் மீது இன்னும் நம்பிக்கையை பெரும்பாலானோர் வைத்துள்ளனர் என்பது மட்டும் புரிகிறது. இந்த நம்பிக்கையை வரும் சட்டசபை தேர்தலில் கமல் நிச்சயம் பூர்த்தி செய்வார் என்றே நம்புவோம்!












Click it and Unblock the Notifications