தேவைப்பட்டால் கோட்டை நோக்கி புறப்படுவேன்... பரபரப்பை ஏற்படுத்திய கமலின் பேச்சுகள் இதோ...
தேவைப்பட்டால் கோட்டையை நோக்கி புறப்படுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை: தேவைப்பட்டால் கோட்டை நோக்கி புறப்படுவேன் என்று அவர் பேசிய பரபரப்பு பேச்சுகள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை பார்ப்போம்.
அரசியலில் அதிமுகவில் நடைபெறும் கோஷ்டி பூசல் ஒரு புறம் இருந்தாலும், இன்றைய ஹாட் டாபிக் அரசியலுக்கு முதலில் வருவது யார் நடிகர் ரஜினிகாந்தா இல்லை கமல்ஹாசனா என்பதுதான்.
நடிகர் கமல் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சை அடுத்து அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது. அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் ஆட்சியாளருக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

தமிழகத்தில் ஊழல்
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் அனைத்து துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. ரஜினி அரசியலுக்கு வந்தாலும் தவறிருந்தால் அவரையும் தட்டி கேட்பேன். சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நீதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அந்தச் சட்டம் பாதுகாக்கும். என்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது நடக்கட்டும். என்னை கைது செய்யக்கூறும் கூட்டத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னை சிறையில் அடைத்து பார்க்க வேண்டும் என்பவர்களும் என் ரசிகர்கள்தான் என்றார்.

கோவை விழாவில்
கோவையில் திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் கூறுகையில் ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு திருடர்களை அனுமதித்துவிட்டோம். இந்த அரசியலை இப்படியே விட்டுவிடக் கூடாது. கோட்டை நோக்கி புறப்படுவோம் தேவைப்பட்டால் கோட்டை நோக்கி புறப்படுவோம். அரசியலை ட்விட்டரில் தொடங்கினால் என்ன? கோவையில் தொடங்கினால் என்ன? தொழிலாளியுடன் கோரிக்கைகாக செல்வதைப் போன்றதுதான் கோட்டை நோக்கிய பயணம்என்று பேசியிருந்தார்.

நீட் குறித்து கமல் பேச்சு
‘‘நீட் தேர்வு பிரச்சினையில் நம் பிள்ளைகள் தெருவில் நிற்கிறார்கள். அவர்களை தெருவில் நிறுத்தி விட்டோம். அங்கே நிற்கும் பிள்ளைகள் அனைவரும் விளையும் பயிர்கள். இந்த பிரச்சினையில் அவர்கள் போராட வேண்டிய அவசியம் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. நாம், நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை எங்கோ தவற விட்டு விட்டோம் என்பதுதான் பாமரத்தனமான என்னுடைய கருத்து.

மாநில பட்டியலில்...
பன்முகம், பல மொழிகள் என்று இருக்கும் இந்த நாட்டில் மாநில அரசுகளிடம்தான் கல்வி உரிமை இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முன்பு அப்படித்தான் இருந்தது என்று சில பெரியவர்கள் சொன்னார்கள். எங்கே அந்த உரிமையை தவற விட்டோம் என்று கேட்டபோது எமர்ஜென்சி சமயத்தில் அதை மையத்தில் கொண்டு போய் வைத்துக்கொண்டார்கள் என்று சொன்னார்கள். அதன்பிறகு அதில் திருத்தங்கள் செய்யப்படவில்லை. நாம் என்பதை அரசு என்று சொல்லி மறுபடியும் அரசியல்வாதிகளைத்தான் திட்ட வேண்டியது இருக்கும். நான் அரசு என்று சொல்வது நம்மையும் சேர்த்துதான். இந்த குரலை இன்னும் முன்பாகவே எழுப்பி இருக்க வேண்டும். இந்த பிரச்சினையில் நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்வோம்.''

திருத்திக்கோங்க...
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது நடிகர் கமல் பேசுகையில், இன்னும் நிகழ்ச்சி முடிய சில நாள்களே உள்ளது. சரியான ஆளை தேர்ந்தெடுப்பீர்கள் என்று முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுவரை சரியாகத்தான் செய்தீர்கள். ஓரிரு முறை வேண்டுமானாலும் ஏதாவது தவறு நடந்திருக்கலாம். இது திருந்திக் கொள்ளும் நேரம், செய்வீர்கள் என நம்புகிறேன் என்றார். சிறிது நேரம் அமைதி காத்த கமல் தனக்கே உரிய பாணியில், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேன். வேறு மாதிரியான அர்த்தங்களை நீங்கள் கற்பித்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. எனக்கு கொடுத்த வேலையை செய்கிறேன். நடுவில் எனக்கு தோன்றியதை சொல்கிறேன். தவறா நினைக்காதீங்கள் என்றார்.

அரசியல்வாதிகளை சீண்டும் கமல்
இதுபோல் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தனது வலிமையான கருத்துகளை முன்வைத்து ஆட்சியாளர்களை சீண்டி வருகிறார். அதற்கு ஆட்சியாளர்களும் பதிலடி கொடுத்தபடி உள்ளனர்.












Click it and Unblock the Notifications