2.0 பாடல் வெளியீட்டு விழா.. ரஜினியின் சிவாஜி மணிமண்டப பேச்சுக்கு பதிலடி தருவாரா கமல்?
இயக்குநர் ஷங்கரின் 2.0 பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினியும், கமலும் கலந்து கொள்ளும் நிலையில் அந்த விழா சிவாஜி மணி மண்டபம் போல் காரசாரமாக அமையுமா என்று இரு தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: துபாயில் நடைபெறும் இயக்குநர் ஷங்கரின் 2.0 பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் கலந்து கொள்ளவுள்ள நிலையில் சிவாஜி மணி மண்டபம் போல் காரசாரமாக அமையுமா என்று இரு தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
நடிகர் கமலும், ரஜினியும் அரசியல் கட்சிகளைத் தொடங்கவுள்ளனர். கடந்த சில தினங்களாக நடிகர் கமல் ஹாசன் தமிழக அரசை தாக்கி பேசி வருகிறார். அவர் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கவுள்ளார்.
அதேபோல் ரஜினியும் வரும் ஜனவரியில் அரசியல் மாநாடு நடத்த போவதாக தகவல்கள் வருகின்றன.

ரஜினியை சீண்டிய கமல்
இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக தெரிவித்த நாள் முதல் ரஜினியை கமல்ஹாசன் தொடர்ந்து சீண்டி வந்தார். கமல் தனது டுவிட்டரில் முந்தி செல்லாதே கூட நட என்று தெரிவித்திருந்தார். அதேபோல் முரசொலி விழாவில் தற்காப்பை விட தன்மானமே முக்கியம் என்று ரஜினியை நேரடியாக கமல் தாக்கி பேசினார். மேலும் ஆன்மீகவாதியான ரஜினி, பாஜக கூட்டணிக்கு பொருத்தமானவர் என்று பேசியிருந்தார்.

ரஜினியை சீண்டியதால் ரசிகர்கள் கோபம்
ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசன் சீண்டி வந்த நிலையில் அவரது ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருந்தனர். நீண்டகாலமாக பொறுத்திருந்த ரஜினி, சிவாஜி மணி மண்டபத் திறப்பு விழாவில் சிரித்துக் கொண்டே பொங்கி எழுந்துவிட்டார்.

நடிகர் கமலுக்கு பதிலடி
சிவாஜி மணி மண்டப விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ்,பணம், பெயர் இருந்தால் மட்டும் போதாது. அதையும் தாண்டி வேறு ஒன்று உள்ளது. அது மக்களுக்குத்தான் தெரியும். சத்தியமாக எனக்கு தெரியாது. ஒரு வேளை கமலுக்கு தெரிந்திருக்கலாம். தெரிந்திருந்தாலும் அவர் எனக்கு அந்த ரகசியத்தை சொல்ல மாட்டார்.

கூட நட என்கிறார்
ஒரு வேளை 2 மாதங்களுக்கு முன்னர் கேட்டிருந்தால் கூறியிருப்பாரோ என்னவோ. தற்போது நீங்கள் திரைத்துறையில் அண்ணன், நான் உங்க தம்பி கொஞ்சம் சொல்லுங்கள் என்றால் என் கூட வா சொல்கிறேன் என்றார் என்று நடிகர் ரஜினி சொல்லிவிட்டு சிரித்தார். இது ரஜினியை கூட்டணிக்கு அழைத்தது, பாஜக கூட்டணி அமைப்பார் என்று கூறியது எல்லாவற்றுக்கு சேர்த்து கமலுக்கு ரஜினி கொடுத்த பதிலடியாக கருதப்பட்டது.

பாடல் வெளியீட்டு விழா
ரஜினியின் பேச்சால் கமல் ரசிகர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் ரஜினியின் 2.0 திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நடைபெறுகிறது. இதில் நடிகர் ரஜினியும், கமலும் கலந்து கொள்கின்றனர். இந்த மேடையில் எப்படியும் கமல் பேசிய பிறகு தான் ரஜினி பேசுவார். எனவே சிவாஜி மணி மண்டப விழாவில் ரஜினி பேச்சுக்கு கமல் பதிலடி கொடுப்பார் என்று கமல் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். எனவே இரு தரப்பு ரசிகர்களும் எதிர்பார்க்கும் படி விழா நடைபெறுமா அல்லது வெறும் பாடல் வெளியீட்டு விழாவாக நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications