அரசியல் பேச்சுகளுக்கு பிறகு முதல் முறையாக களத்தில் குதித்த கமல்!
Recommended Video
சென்னை: அரசியல் பேச்சுகளுக்கு பிறகு, முதல் முறையாக நேரடியாக மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் களம் குதித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், அரசியல் குறித்த பேச்சுக்களை அதிகமாக பேசி வருகிறார். டிவிட்டர், பிக்பாஸ் என எல்லா இடங்களிலும் கமல் இதுகுறித்த பேச்சுக்களை முன் வைத்தார்.
இதுகுறித்து ஆளும் கட்சியினர் விமர்சனங்களையும் செய்ததுண்டு. கமல் டிவிட்டருக்குள் ஒளிந்து கொண்டார் என்று விமர்சனங்களை அவர்கள் முன்வைத்தனர்.
நேரடி ஆய்வு
கமல் டிவிட்டர் பக்கத்திலும் அவரது ரசிகர்கள் பலரும் கூட நீங்கள் களத்திற்கு வாருங்கள் என பின்னூட்டம் அனுப்பினர். இவ்வாறு தொடர்ச்சியாக பல தரப்பிலிருந்தும் கோரிக்கைககள் வலுத்து வந்த நிலையில், எண்ணூர் துறைமுகம் பகுதியில் கமல் இன்று நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.
முதல் முறை
அரசியலில் நான் எப்போதோ குதித்துவிட்டேன் என்றும், தனிக்கட்சி தொடங்கப்போகிறேன் என்றும் ஊடகங்கள் வாயிலாக கூறி வந்த கமல், முதல் முறையாக அந்த பேச்சுக்களுக்கு பிறகு களத்தில் குதித்துள்ளார்.
நற்பணி இயக்கம்
கமல் தனது நற்பணி இயக்கங்கள் மூலம் பல்வேறு நன்மைகள் செய்துள்ளார். அப்போது ரசிகர்களோடு இணைந்து நற்பணி திட்டங்களை கொண்டு சேர்த்தார். ஆனால், அரசியல் பேச்சுகளுக்கு பிறகு கமலின் முதல் வெளி பிரவேசம் இதுதான். இப்போது அவர் ரசிகர்களை உடன் அழைத்துச் செல்லவில்லை. திடீர் விசிட் இது.
மீனவர்கள் ஆதரவு
நேற்று டிவிட்டரில் எண்ணூர் துறைமுகம் குறித்து அவர் கருத்து கூறியிருந்தார். இதையடுத்து காட்டாங்குப்பம் மீனவர்கள் தங்களது நன்றியை வீடியோவாக பதிவு செய்து கமலுக்கு அனுப்பினர். இதற்கு, நன்றி தெரிவிக்க தேவையில்லை. இது எனது கடமை என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
நேரடி அரசியல்
இந்த நிலையில் கமல் களத்தில் குதித்திருப்பது, அவர் நேரடி அரசியலுக்கு வர ஆயத்தமாகிவிட்டாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதேநேரம், வரும் நவ. 7ம் தேதி தனிக்கட்சி தொடங்கும் அறிவிப்பை கமல் வெளியிடப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.