உள்ளே.. வெளியே..? 2024 பிளான் என்ன? முக்கிய முடிவை எடுக்கும் கமல்ஹாசன்.. மக்கள் நீதி மய்யம் ஆலோசனை!
சென்னை : 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்த நிலையில், 2024ல் என்ன முடிவை எடுப்பது என்பது பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
மக்கள் நீதி மய்யம் : மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் சரத்குமாரின் சமக, பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த 2 தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2.6 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தாலும், வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனும் சொற்ப வாக்குகளில் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து கமல்ஹாசன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் தலைமையில் வரும் 28ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
முக்கிய ஆலோசனை : இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில், ஏப்ரல் 28 ஆம் தேதி கோயம்புத்தூரில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது, கூட்டணி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் மேற்கொண்டிருந்தார் கமல்ஹாசன்.

கூட்டணி உறுதி? : முன்னதாக, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திலும் கலந்து கொண்டார் கமல்ஹாசன். இதனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் கமல்ஹாசன், தேர்தல் குறித்து முடிவெடுக்க உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுமா அல்லது கமல்ஹாசன் தனித்து போட்டியிடுவாரா? என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications