குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்த நிஷா, அனுவித்யா குடும்பத்துக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்
குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த நிஷா குடும்பத்துக்கு கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த நிஷா, அனுவித்யா ஆகியோரின் குடும்பத்திநருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டு பகுதிக்கு கடந்த வாரம் 36 பேர் கொண்ட குழுவினர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். அப்போது அவர்கள் திரும்பி வரும் வழியில் காட்டு தீ ஏற்பட்டது.
இதில் சிக்கி 9 பேர் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். 10 பேர் காயங்களின்றி உயிர் பிழைத்தனர். மீதமுள்ள 17 பேர் 50 சதவீத காயங்களுக்கு மேல் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
16-ஆக உயர்வு
அதில் 100 சதவீம் தீக்காயம் அடைந்த நிஷா உயிரிழந்துவிட்டார். மேலும் ஈரோடு திவ்யா, சென்னை அனுவித்யா, கடலூர் சுபா கண்ணன், திருப்பூர் சக்தி கலா, எடப்பாடி தேவி உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது.
மலர் தூவி அஞ்சலி
இந்நிலையில் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள நிஷாவின் வீட்டுக்கு இன்று கமல்ஹாசன் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். அங்கு அவரது திருவுருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அனுதாபங்கள்
அதேபோல் சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள அனுவித்யாவின் வீட்டுக்கும் கமல் சென்றார். அங்கு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். அப்போது கமல் செய்தியாளர்களை சந்தித்தார்.
பாடமாக எடுத்து கொள்ள வேண்டும்
அவர் கூறுகையில் இந்த தீவிபத்து நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தீ எரிந்து கொண்டிருந்த நிலையில் அதுகுறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து மலையேற்றத்துக்கு தடை விதித்திருக்கலாம். இந்த விபத்தை நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உரிய வழிகாட்டுதல்கள்
எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மலையேற்றத்துக்கு செல்பவர்களும் எச்சரிக்கையுடன் உரிய வழிகாட்டுதல்களின் பேரிலும் செல்ல வேண்டும் என்றார் கமல்.