காமராசர் சிலையின் முகத்தில் அவமரியாதை.. தென்காசி அருகே பதட்டம்
தென்காசி:தென்காசி அருகே காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி அருகே உள்ளது பெரியபிள்ளைவலசைக் கிராமம் இந்த ஊரின் நுழைவுப் பகுதியில் காமராஜர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலையை நேற்றிரவு யாரோ சில மர்ம ஆசாமிகள் முகப்பகுதியில் மாட்டு சாணத்தை அப்பிவிட்டு சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை அப்பகுதிமக்கள் அங்குவந்தபோது சிலை அவமதிப்பு செய்யப்பட்டிருப்பத்துக் கண்டு காவல்துறைக்கும்,அப்பகுதி மக்களுக்கும் தகவல் சொல்லவே விஷயம் காட்டுத் தீயாய் பரவியது. ஏராளமான ஆண்களும், பெண்களும் சாலைக்குத் திரண்டுவந்து மறியலில் குதிக்க முயற்சித்தனர்.
செங்கோட்டை இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிலையில் செய்யப்பட்டிருந்த அவமதிப்பை தண்ணீர் விட்டுக் கழுவினர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தால்தான் அங்கிருந்து செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கவே காவல்துறைக்கும்,பொதுமக்களுக்கும் வாக்குவாதம் உருவானது.

தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அரவிந்தன் விரைந்து வந்து குற்றவாளிகளை கைதுசெயவதாக உறுதியளித்தும் பொதுமக்கள் மறுப்புதெரிவித்து செங்கோட்டை ரயில் நிலையம் சாலையில் மறியல் செய்ய திரண்டுவந்தனர்.

அவர்களை தென்காசி துணை கண்காணிப்பாளர் அரவிந்தன், தாசில்தார் சங்கர கோமதிநாயகம் ஆகியோர் சமாதானப்படுத்தி மறியல் திட்டத்தை கைவிடசெயது பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இருப்பினும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications