மதுராந்தகம் ஏரி உட்பட 170 ஏரிகள் நிரம்பின... உபரி நீர் வெளியேற்றம் - வெள்ள எச்சரிக்கை
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி உள்ளிட்ட 170 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம்: கடந்த ஒருவாரமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி வேடந்தாங்கல் ஏரி, வளையப்புதூர் ஏரி உட்பட 170 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 148 ஏரிகளில் 75 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய ஆறுகள் கலக்கும் இடமான திருமுக்கூடல் பகுதியில் அதிக அளவு நீர் ஆறுகளில் ஓடுகிறது. அதிக மழை பெய்தால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுவதை தடுக்க மஞ்சள் நீர் கால்வாய் பல்வேறு இடங்களில் தூர்வாரப்பட்டு வருகிறது.
பல்வேறு ஏரிகளுக்கும் தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் மேலும் சில ஏரிகள் விரைவில் நிரம்ப வாய்ப்பு உள்ளது என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்தனர்.
உபரிநீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரி முழுமையாக நிரம்பி உள்ளதால் உபரி நீர் கிளியாற்றில் வெளியேற்றப்பட உள்ளது. கிளியாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களுக்கு எச்சரிக்கை
கத்திரிச்சேரி, விழுதமங்கலம், முன்னூத்திக்குப்பம், முள்ளி, வளர்பிறை, முருக்கச்சேரி, வீராணகுண்ணம், குன்னத்தூர், தச்சூர், நீலமங்கலம், மலைப்பாளையம், கருங்குழி, தோட்டநாவல், கினார் உள்ளிட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டுக்காலனி, இருசாமநல்லூர், கே.கே.பூதூர், பாத்திமா நகர், பூண்டி நகர், சகாய நகர், ஈசூர் ஆகிய கிராமமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தைக் கண்காணிக்க சில தினங்களுக்கு 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மழை நீடிக்கும் நிலையில், பிரவீன்நாயர், அருண்தம்புராஜ், கண்ணன், ஆனந்த், தினேஷ் அலிவார், ஜான் லூயிஸ், அருண் தயாளன் ஆகிய 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மழை நிவாரண பணிகளை பார்வையிட கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏரிகள் மாவட்டம் காஞ்சிபுரம்
கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த பெருமழை வெள்ளத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 912 ஏரிகள் நிரம்பி வழிந்தன. இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் அனைத்து ஏரிகளும் விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கலாம்.