பாலேஸ்வரம் காப்பகத்திற்கு சீல் வைக்கப்படும் - மாவட்ட வருவாய் அலுவலர்
பாலேஸ்வரம் முதியவர் காப்பகத்திற்கு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகமது தகவல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசப் ஆதரவற்றோர் இல்லம் 2 நாட்களில் மூடப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகமது தகவல் தெரிவித்துள்ளார். நல்ல உடல்நிலையில் உள்ள 86 பேர் இன்றே இடமாற்றம் செய்யப்படுவர் என்று அவர் கூறியுள்ளார்.
பாலேஸ்வரத்தில் உள்ள செயிண்ட் ஜோசப் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் இறந்தவர்கள் உடலை பதப்படுத்தி, எலும்புகளை மருந்து தயாரிப்புக்காக வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக கடத்துவதாகப் புகார் எழுந்தது.

மேலும் இங்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்கள் எலும்புக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த இல்லத்திற்கான உரிமம் கடந்த ஆண்டு நவம்பரியே முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது வரை உரிமம் இன்றி இயங்கி வருகிறது.
இங்கு தங்கி இருப்பவர்களுக்கு மருத்துவ வசதியும் அளிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அடுக்கடுக்கான புகார்களை தொடர்ந்து காவல்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே இந்த இல்லத்தில் சோதனை நடத்தி அறிக்கையை ஆட்சியரிடம் அளித்தனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அந்த இல்லத்தில் விருப்பம் இன்றி தங்கியுள்ளவர்கள் யார், அவர்களுக்கு சொந்த ஊர் செல்ல விருப்பம் இருக்கிறதா? என்பதை அறிந்து அவர்களை அனுப்பி வைக்குமாறு, உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் வருவாய் கோட்டாட்சியர் ராஜூ தலைமையில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை, காவல்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அங்கு உள்ள முதியவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக அங்கிருந்த முதியவர்களில் 40 பேர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வேன்களில் ஏற்றி மதுராந்தகம், மற்றும் தொழுப்பேடு அரசு உதவி பெறும் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.எஞ்சிய 310 பேர் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒருபிரிவினரை வேறு காப்பகங்களுக்கு அனுப்பவும், வீடுகளுக்கு செல்ல விரும்புவோரை அவரவர் வீடுகளுக்கும் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்குள்ள முதியவர்களில் 40 சதவீதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களை மனநல மருத்துவமனைகளுக்கு அனுப்ப நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
50க்கும் மேற்பட்டோர் காப்பகத்தில் இருந்து வெளியேற மறுக்கும் நிலையில் அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி காப்பகத்தில் இருந்து அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே 2 நாட்களில் காப்பகத்திற்கு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகமது தகவல் தெரிவித்துள்ளார். நல்ல உடல்நிலையில் உள்ள 86 பேர் இன்றே இடமாற்றம் செய்யப்படுவர் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications