காஞ்சிபுரம் 'டான்' ஸ்ரீதரின் தம்பி செந்திலைத் தூக்கியது அமலாக்கப் பிரிவு!
காஞ்சிபுரம் டான் ஸ்ரீதர் தம்பி செந்தில் நேற்று இரவு சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளால் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை: காஞ்சிபுரம் டான் ஸ்ரீதரின் தம்பி செந்தில். நேற்றிரவு அவரை சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் காஞ்சிபுரத்தில் கைது செய்தனர். செந்திலை சென்னைக்கு அழைத்து வந்து உயர் அதிகாரிகளால் தனி அறையில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் அருகேயுள்ள திருப்பருத்திக்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், ரியல் எஸ்டேட் தாதா. இவர் மீது காஞ்சிபுரம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, அடிதடி, செம்மர கட்டை கடத்தல் உள்பட 20க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஸ்ரீதர், காஞ்சிபுரம் ஒன்றிக்குழு துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். ஐந்து முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியே வந்த ஸ்ரீதர், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் தேடியபோது தலைமறைவாகிவிட்டார். இவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.
ஸ்ரீதர் அவரது மனைவி குமாரி ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த அவரது மனைவி குமாரியை, கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், 80 சதவீதம் சொத்துக்கள் பெரும்பாலும், அவரது மனைவி குமாரியின் பெயரிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஸ்ரீதர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரைக் கைது செய்ய அமலாக்கத்துறை, இண்டர்போல் போலீசாரின் உதவியை நாட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீதரின் தம்பி செந்திலை கைது செய்துள்ளனர். செந்தில் பெயரில் பல கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், அந்த சொத்துக்களை செந்தில் பங்கு பரிவர்த்தணை செய்ததாகவும், ஸ்ரீதர் கொள்ளையடித்த சொத்துக்கள் அனைத்தும் தனது தம்பி பெயரில் வைத்துள்ளதாகவும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications