திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்.... கடல் அலையென திரண்ட மக்கள்
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்றது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்
தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த கந்த சஷ்டி விழா இன்று 6ம் திருநாள் இன்று மாலை கடற்கரையில் சூரபத்மனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர் என்னும் முருகப்பெருமான். அவர் சூரனை வதம் செய்து அந்த வெற்றிக்கு பரிசாக தெய்வானை, வள்ளியை நாளை மணம் புரிகிறார்.
கந்த புராணக் கதையைச் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்" என்று நகைச் சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரபத்மனை இரண்டாக பிளந்து சம்ஹாரம் செய்தார் என்பது இதன் பொருள்.

சூரபத்மன்
யாராக இருந்தாலும் ஆணவத்தில் ஆடக்கூடாது என்பார். அந்த ஆணவமே அழிவை ஏற்படுத்தி விடும். சூரபத்மன் தான் பெற்ற வரத்தால் நன் மக்களுக்கும், தேவர்களுக்கும் துன்பங்கள் பல செய்தான். அந்த சூரபத்மனை சம்ஹாரம் செய்யவே அக்னியில் தோன்றிய ஆறுமுகன், தன்னுடைய சக்தி வேலாயுதத்தால் சூரபத்மன் உடலை இரு துண்டுகளாக்கினார்.

சூரசம்ஹாரம்
சம்ஹாரம் செய்யப்பட்ட சூரபத்மன் மயிலாகவும், சேவலாகவும் மாறினான். மயிலை வாகனமாகவும், சேவலை தன் கொடியிலும் சேர்த்துக்கொண்டார் முருகப்பெருமான். இதனை விளக்கவே சூரசம்ஹாரம் முடிந்த உடன் முருகனை மயில்வாகனத்தில் ஏற்றுகின்றனர். முருகனுக்கு சேவல் கொடியாகிறது.

திருச்செந்தூர் முருகன் ஆலயம்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புராணங்களின்படி முருகன் தன் படைகளுடன் திருச்செந்தூர் வந்து தங்கியதாகவும், அங்கு விஸ்வகர்மாவால் அமைக்கப்பட்ட தேவகுருவாகிய குரு என்ற வியாழபகவானால் பூஜிக்கப்பட்டு அசுரர்களின் வரலாறு பற்றி அறிந்ததாகவும் கூறப்படுகிறது.
வியாழபகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் சிறப்பு பெற்ற குரு தலமாகவும் போற்றப்படுகிறது.

ஜெயந்தி நாதர்
இங்கிருந்து குமரபெருமான் வீரபாகு தேவரை சூரபத்மனுக்கு அறிவுரை கூறும்படி தூது அனுப்பினார். வீரபாகு தேவரின் தூது பயனற்று போகவே முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரனை வெற்றிக்கொண்டார். இந்நகர் வெற்றி மாநகர் என பொருள்படும்படி ஆரம்பத்தில் வடமொழியில் ஜெயந்திபுரம் என அழைக்கப்பட்டு பின்னர் சயந்தி, செந்தில், திருச்செந்தூர் என்றெல்லாம் தமிழில் பெயர்கள் பெற்றுள்ளது.

நோய் தீர்க்கும் ஆலயம்
திருச்செந்தூர் கோவிலில் மூலவருக்கு பின்னால் முருகப்பெருமானால் பூஜிக்கப்பட்ட பஞ்சலிங்கங்கள் உள்ளன. கோவிலின் தெற்கே கடற்கரை ஓரமாக சிறிது தூரத்தில் கந்தபுஸ்கரணி அமைந்துள்ளது. இத்தீர்த்தம் நாழி கிணறு என்று அழைக்கப்படுகிறது. இப்புனித கிணற்று நீர் இனிமையாக இருப்பதுடன் நோய்களை தீர்க்கும் குணம் படைத்ததாகவும் இருக்கிறது.

கந்த சஷ்டி
'கந்தசஷ்டி திருநாளில் என்னவரம் கேட்டாலும் அந்த வரம் தந்திடுவான் முருகன்' என்று கூறப்படுகிறது. திதிகளில் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருகிறது. செல்வத்தை தரும் சுக்கிரனின் எண் 6, சுக்கிரனின் அதிதேவதை மகாலெட்சுமி. மற்ற நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட 6வது திதியான சஷ்டியில் விரதம் இருப்பதன் மூலம் மகாலெட்சுமியின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

குவிந்த கூட்டம்
இன்று மாலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. இன்று பகல் 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாரதனை நடக்கிறது. மாலை 4.35 மணிக்கு கடற்கரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்கிறார். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு வசதிக்காகவும் கடற்கரையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடற்கரையில் பக்தர்கள்
சூரன் மயிலாகவும் சேவலாகவும் மாறி முருகப்பெருமானுடன் ஐக்கியமானார். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு ஊர்கள், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். பாத யாத்திரையாக பக்தர்களும் வந்த வண்ணம் உள்ளனர். கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா? கடல் அலையா என்று கூறும் அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.












Click it and Unblock the Notifications