தேர்தலைக் கூட சரியாக நடத்த முடியாத சக்சேனா.. கனிமொழி தாக்கு
மதுரை: ஒரு இடைத் தேர்தலைக் கூட சரியாக நடத்த முடியவில்லை தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவால். அவர் இதற்கு ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும் வேண்டும் என்று திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆர்.கே.நகரில் நடைபெறுவது சட்டத்திற்குப் புறம்பான திணிக்கப்பட்ட இடைத் தேர்தல். அங்கு அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் நியாயமாக பாரபட்சமின்றி செயல்படவில்லை. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே அது உள்ளது.
ஒரு இடைத் தேர்தலைக் கூட சரியாக நடத்த முடியாமல் இருக்கிறார் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா. இதற்கு அவர் ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும்.
அதிமுகவினர் செய்து வரும் அட்டகாசங்கள் அராஜகங்களுக்கு வரும் சட்டசபை பொதுத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார் கனிமொழி.