கனிமொழி பேசாத திமுக மேடை...!
சென்னை: மிகவும் எழுச்சியுடன் நேற்று இரவு நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டில் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி மட்டும் பேசவில்லை. தைராய்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட காரணத்தால் அவர் நேற்றைய மாநாட்டின்போது பேசவில்லை.
மது விலக்குக்கு எதிராக மகளிர் மாநாட்டை நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள கரசங்காலில் நடத்தியது திமுக. ஆயிரக்கணக்கில் பெண்கள் திரண்டு வந்து இதில் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, சுப்புலட்சுமி ஜெகதீசன், கவிஞர் சல்மா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

துரைமுருகனின் பாசப் பேச்சு
மாநாட்டில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கனிமொழி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். கனிமொழி பிறந்து கண்ணைத் திறப்பதற்குள்ளாகவே அதைத் தனது கையில் ஏந்தி பாசத்துடன் பார்த்தவன் தான் என்பதை குறிப்பிட்டு அவர் சொன்னபோது கனிமொழி முகத்திலும் நெகிழ்ச்சி தெரிந்தது.

கனிமொழி பேசவில்லை
மாநாட்டில் கனிமொழி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பேசவில்லை. தைராய்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளதால் அவர் பேசுவதைத் தவிர்த்து விட்டார். ஆனால் அனைவரும் கனிமொழியைப் பற்றிப் நிறையவே பேசினார்கள்.

வரவேற்ற காஞ்சனா.. நன்றி சொன்ன ஹெலன்
மாநாட்டில் மகளிர் அணித் தலைவி காஞ்சனா கமலநாதன் வரவேற்பு நிகழ்த்த, ஹெலன் டேவிட்சன் நன்றி நவின்றார்.

மாநாட்டு தீர்மானம்
மதுவிலக்கு கோரி தமிழகத்தில் நடைபெறும் மக்கள் இயக்கத்தை திசை திருப்புவதற்காக ஆளும் கட்சியினர் பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறார்கள். தமிழ் மக்களின் எண்ண ஓட்டங்களையும், அதன் அடிப்படைகளையும் முறையாகவும், சரியாகவும் புரிந்து கொண்டு அ.தி.மு.க. அரசு உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும் என்றும், அது குறித்து உரிய அறிவிப்பினை வரும் சட்டமன்ற கூட்ட தொடர் தொடங்கும்போதே அறிவித்து விட வேண்டும் என்றும், மதுவிலக்கு போராட்டங்கள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக எந்த வித நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும், போராட்டங்களையொட்டி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் மேல் நடவடிக்கை இன்றி திரும்ப பெற வேண்டும் என்றும் அதிமுக அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications