தமிழகத்தை தாங்கி நின்ற கோபுரம் சாய்ந்தது - கனிமொழி, குஷ்பு அஞ்சலி
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் உடலுக்கு திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை நள்ளிரவு காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
காலை முதலே லட்சக்கணக்கான தொண்டர்களும், தமிழக மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கனிமொழி இரங்கல்

அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் தனது இரங்கலை பதிவு செய்த கனிமொழி, மாநில உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்காதவர். அவருக்கு விழும் தடைகளை எல்லாம் வெற்றிப் படிகளாக மாற்றியவர் என்று புகழாரம் சூட்டினார்.
தமிழகத்திற்கு வெற்றிடம்
திறமையான, அறிவுக்கூர்மையுள்ள தலைவராக இருந்தார். அவரது இறப்பு, அவர் தலைமை தாங்கி வழி நடத்திய அதிமுகவுக்கு மட்டும் அல்ல, தமிழகத்துக்கே மிகப்பெரிய வெற்றிடம் என்று தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்களுக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன் என்று கனிமொழி கூறினார்.
கோபுரம் சாய்ந்து விட்டது

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோபுரங்கள் சாய்வதில்லை என்பார்கள், ஆனால் தமிழகத்தின் கோபுரமாக இருந்த ஜெயலலிதா அம்மா சாய்ந்துவிட்டார். எந்த நிலையிலும் தைரியமாக செயல்பட்டு, தைரியத்தின் அடையாளமாக இருந்த பெண்மணி.
நம்முடன் இருப்பார் அம்மா
பெண்கள் எப்படி வாழ்வது என்று பலருக்கும் எடுத்துகாட்டாக இருந்தவர். அவர் வெறும் அரசியல்வாதியாக மட்டுமில்லாமல அதையும் தாண்டி அனைவராலும் மரியாதை கொடுக்கும் அளவுக்கு உயர்ந்தவர். சிலர் இறந்தாலும் எப்போதும் நம்முடன் தான் இருப்பார்கள். அதே போல ஜெயலலிதாவும் நம்முடன் தான் இருப்பார் என தனது இரங்கல் செய்தியில் பதிவு செய்தார் குஷ்பு.












Click it and Unblock the Notifications