ஆண்களே ரேஷன் கடைக்கு போங்க, அப்பதான் பெண்கள் படும்பாடு புரியும்: கனிமொழி
சேலம்: ஆண்களே ரேஷன் கடைக்கு செல்லுங்கள் அப்போது தான் பெண்கள் படும் கஷ்டம் புரியும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உமாராணி செல்வராஜுவுக்கு ஆதரவாக அக்கட்சியின் எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்தார்.

சேலம் முழுவதும் வாக்கு சேகரித்த அவர் தானாக பேசாமல் வாக்காளர்களிடம் கேள்விகள் கேட்டு வித்தியாசமாக பிரச்சாரம் செய்தார்.
ஜான்சன்பேட்டையில் பேசிய அவர் ஆண்கள் கூட்டத்தை பார்த்து ரேஷன் கடைகளில் எவ்வளவு மண்ணெண்ணெய் ஊற்றுகிறார்கள் என்று தெரியுமா? என்று கேட்டார். அதற்கு ஆண்கள் 5 லிட்டர் என்று பதில் அளித்தனர். அதே கேள்வியை அவர் பெண்கள் பக்கம் பார்த்து கேட்க அவர்களோ வெறும் இரண்டு லிட்டர் தான் கொடுக்கிறார்கள் என்றார்கள்.
ஆண்களே கொஞ்சம் ரேஷன் கடை பக்கம் செல்லுங்கள் அப்போது தான் பெண்களின் நிலைமை தெரியும், அவர்கள் படும் கஷ்டம் புரியும். இந்த ஆட்சியில் எதுவும் ஒழுங்காக கிடைப்பது இல்லை என்றார் கனிமொழி.
பின்னர் கன்னங்குறுச்சியில் பேசிய அவர் கூறுகையில்,
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடும், அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்கு உள்ஒதுக்கீடும் வழங்கியது நம் கலைஞர் தான். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுக்க அண்ணன் வீரபாண்டியார் பாடுபட்டார். அதனால் அனைவரும் நலம் பெற திமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications