3 மாதத்தில் திண்டுக்கல்லில் 20 கொலைகள்.. இதுவா முன்னேற்றம்.. கனிமொழி கேள்வி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 20 கொலைகள் நடந்துள்ளன. இதுவா முன்னேற்றம்... கடந்த 3 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில்தான் தமிழகம் முன்னேறியுள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
திண்டுக்கல் திமுக வேட்பாளர் காந்திராஜனை ஆ்தரித்து கனிமொழி பிரசாரம் செய்தார்.
திண்டுக்கல், நாகல்நகர், பஞ்சம்பட்டி, ஆத்தூர் உள்பட பகுதிகளில் பிரச்சாரம் மேற் கொண்டார். திண்டுக்கல்லில் திறந்தவேனில் நின்றபடி கனிமொழி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது...
சட்டம் ஒழுங்கு மோசம்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முன்னேறிச் செல்கிறது.
3 மாதத்தில் 20 பெண்கள் கொலை
கடந்த 3 மாதங்களில் மட்டும் திண்டுக்கல்லில் 20 கொலைகள் நடந்திருக்கிறது. இதற்கு அதிமுக ஆட்சியில் உள்ள காவல்துறை மெத்தனமாக உள்ளது.
வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஜெ. அரசு
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது.
பொருளாதார வளர்ச்சியைத் தடுத்தவர் ஜெ.
சேது சமுத்திர திட்டம் செயல்படுத்துவதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கவுள்ள பொருளாதார வளர்ச்சியை தடுத்தவர் ஜெயலலிதா.
கிடப்பில் போடப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டங்கள
தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தமிழகத்திற்கான சாலை வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டங்கள் கிடப் பில் உள்ளதாக நெடுஞ்சாலை துறை இயக்குனர் ரெட்டி கூறியுள்ளார்.
கரசேவைக்கு ஆள் அனுப்பியவர் ஜெ.
இத்தனை நாட்களாக ஜெயலலிதா இந்துத்வா ஆதரவாளராக இருந்து வந்தார். ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது? என்று கேட்டவர், கரசேவைக்கு ஆள் அனுப்பியவர், தமிழகத்தில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவந்தவர் ஜெயலலிதா.
இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்
அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தபோது, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள் என்று நினைத்து இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று கூறியவர் ஜெயலலிதா.
திமுக ஒதுக்கீட்டை உரிமை கோருகிறார்
ஆனால் திமுக ஆட்சியில் கலைஞர் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தபோது, அதற்கு தானும் காரணம் என்று உரிமை கொண்டாடுகிறார்.
இஸ்லாமியர்கள் நம்ப மாட்டார்கள்
இப்போது தேர்தல் வந்தவுடன் திடீரென்று மதசார்பற்றவர்போல் ஜெயலலிதா பேசுவதை இஸ்லாமிய மக்கள் நம்பமாட்டார்கள்.
சிறுபான்மையினர் மீது திமுகவுக்கு அக்கறை
சிறுபான்மையினர் நல இயக்குனரகம், உருது அகாடமி, உலமாக்கள் ஓய்வூதியம் என்று சிறுபான்மை யினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தியது. மேலும் ஜெயலலிதா மதசார்பு கொள்கை உடையவர். மோடியுடன் கொள்கை ரீதியாக ஒத்துப்போகும் கட்சி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக என்றார் அவர்.
அம்மா ஹோட்டலுக்கு போகுது
பேச்சினூடே கூடியிருந்த மக்களிடம், ரேசன்ல பொருள் சரியா கிடைக்குதா? என்று கேட்டார். பாதிபேர் கிடைக்க வில்லை என்ற உடன், எல்லா பொருளும், அம்மா ஹோட்டலுக்குப் போகுது என்று கூறினார் கனிமொழி.