மே மாதமே கடையை மூடிவிட்டு கம்பி நீட்டிய கனிஷ்க் உரிமையாளர்... வெளிவரும் பரபர உண்மைகள்!
வங்கிகளை மோசடி செய்து கடன் பெற்ற கனிஷ்க் நிறுவனத்தினர் மே மாதத்திலேயே கடையை இழுத்து மூடிவிட்டனர் என்ற உண்மைகள் தற்போது தெரிய வந்துள்ளது.
Recommended Video

சென்னை: 14 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை மோசடி செய்த கனிஷ்க் நிறுவனம் கடந்த மே மாதமே கடையை இழுத்து மூடிவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வடமாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் தொழிலதிபரின் மலைக்க வைக்கும் வங்கி மோசடி அம்பலமாகியுள்ளது. கனிஷ்க் என்ற தங்க நகை நிறுவனம் 14 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி ரூ. 824 கோடி கடன் பெற்றுள்ளது.
இந்த கடன் தொகையை செலுத்தாமல் அதன் உரிமையாளர்கள் கம்பி நீட்டியதால் அசலும் வட்டியுமாக சேர்த்து வங்கிகளுக்கு மொத்தம் ரூ. 1000 கோடி மோசடி ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதலே இந்த விஷயம் வங்கிகளுக்கு தெரிந்திருக்கிறது.

மே மாதமே மூடப்பட்ட கனிஷ்க்
14 வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை ஏப்ரல் 2017 முதலே நிறுத்தியுள்ளார் கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின். இதனைத் தொடர்ந்து மே 25, 2017ல் வங்கி அதிகாரிகள் கனிஷ்க்கின் கார்ப்பரேட் அலுவலகம், தொழிற்சாலை மற்றும் ஷோரூமை பார்வையிட்டுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் மூடப்பட்ட நிலையில் கடைகளில் எந்த ஸ்டாக்கும் வைக்கப்படவில்லை.

பூபேஷ் ஒப்புதல் கடிதம்
மே25,2017ல் பூபேஷ் ஜெயின் வங்கிகளுக்கு எழுதிய கடிதத்தில் தவறான ஆவணங்களை வங்கிகளிடம் அளித்ததையும், ஸ்டாக்குகளை அகற்றியதையும் ஒப்புகொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இதர கிளைகளுக்கும் வங்கி அதிகாரிகள் சென்று பார்த்துள்ளனர் ஆனால் அவையும் மூடியே கிடந்துள்ளன.

எம்ஜேடிஎம்ஏ தகவல்
மே 2017க்கு முன்னரே கனிஷ்க் கடைகள் மூடப்பட்டுவிட்டன. நஷ்டத்தை சரிசெய்ய முடியாமல் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும் மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்சண்ட்ஸ் அசோசியேஷன் நிர்வாகி கூறியுள்ளார்.

எஸ்பிஐ அதிகரித்த கடன்தொகை
கடந்த 2007 முதல் கனிஷ்க் கோல்ட் நிறுவனத்திற்கு எஸ்பிஐ கடன் அளித்து வருவதாக வங்கிப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. நாளடைவில் எஸ்பிஐ இந்த நிறுவனத்திற்கான கடன் அளிப்பு தொகையை அதிகரித்துள்ளது. கடந்த 2008ல் எஸ்பிஐ மூலம் ஐசிஐசிஐ வங்கியிடம் ரூ. 50 கோடி கடன் பெற்றுள்ளது. மார்ச் 2011க்கு பிறகு பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பல வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றுள்ளது கனிஷ்க்.
2012ல் முன்னனி வங்கியான எஸ்பிஐ உலோக தங்க நகைக்கடன் என்ற முறையை கனிஷ்க்கிற்கு அளித்துள்ளது. இதன் மூலம் வங்கிகள் கூட்டமைப்பிடமோ அல்லது சந்தையிலோ தங்கத்தை கனிஷ்க் நிறுவனம் வாங்க முடியும்.












Click it and Unblock the Notifications