காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி...
சென்னை: நேற்று காஞ்சிபுரம் அருகே வையாவூர் கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே வையாவூரில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டு உடனே காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் அவர்கள் அனைவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், மனோன்மணி, தணிகைமலை, மணிமொழி, வெங்கடேசன் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ள 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வெடி விபத்து தொடர்பாக போலீசார் பட்டாசுத் தொழிற்சாலை உரிமையாளர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.