குமரியில் அதிகரிக்கும் கட்டப் பஞ்சாயத்து... லிஸ்ட் போட்டு ரவுடிகளை தூக்கும் போலீஸ்... 10 பேர் கைது!
நாகர்கோவில்: குமரியில் மீண்டும் கட்ட பஞ்சாயத்து செய்யும் ரவுடிகள் தலை தூக்கியுள்ளதால் அவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர். ஒரேநாளில் பத்துபேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ரவுடிகளில் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் ஆசாரி பள்ளம் பகுதியை சேர்ந்த ஜெயசிங் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து வைத்தியநாதபுரத்தை சேர்ந்த டேவிட், வெட்டூரணி மடத்தை சேர்ந்த ஓட்டல் அதிபர் வினோத் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவங்கள் முன் விரோதத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கில் ரவுடிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்ததை தொடர்ந்து ரவுடிகளை ஒடுக்க எஸ்.பி. மணிவண்ணன் புது வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இரவு நேரங்களில் ரோந்து பணியையும் முடுக்கி விட்டுள்ளார்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பழைய வாரண்டு குற்றவாளிகள், ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தவறு செய்பவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் ரவுடிகளை பிடிக்க புது வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் புதியதாக ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் 50க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றுள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தனிப்படை போலீசார் இதில் தனிக்கவனம் செலுத்துகிறார்கள்.
குளச்சல், வடசேரி, கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 10 ரவுடிகள் நேற்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை தொடரும். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் ரவுடிகளுக்கு பணம் கொடுத்து அடிதடியில் ஈடுபடுத்துகிறவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications