ஓகி புயல் மிரட்டல் : குமரியில் கரண்ட், செல்போன் கட் - பஸ்,ரயில் நிறுத்தம் #CycloneOckhi
ஓகி புயல் தாக்கத்தினால் கன்னியாகுமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன் கோபுரங்கள் செயலிழப்பு செய்யப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி: ஓகி புயல் கன்னியகுமரியை இப்போதே மிரட்டத் தொடங்கிவிட்டது. பலத்த காற்றோடு மழை பெய்து வருவதால் மரங்கள் சாய்ந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 312 செல்போன் கோபுரங்கள் செயலிழந்துள்ளன.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தற்போது குமரிக்கு தென்கிழக்கே 170 கி.மீ., காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மழையால் சாய்ந்த மரங்கள்
காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுவதற்கு அறிகுறியாக குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளன.

ரயில் போக்குவரத்து
கன்னியாகுமரியில் சூறைக்காற்றோடு பெய்து வரும் மழையால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

செல்போன் கோபுரங்கள் செயலிழப்பு
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 312 செல்போன் கோபுரங்களும் செயலிழந்துள்ளதால் தகவல் தொடர்பு முடங்கியுள்ளது. இது பற்றி பேசிய வருவாய்துறை ஆணையர் பலத்த சூறைக்காற்று காரணமாக குமரி மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மக்களுக்கு எச்சரிக்கை
நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் கூடும் என்பதால்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால் எச்சரித்துள்ளார்.
மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications