மக்கள் நெருங்கவிடவில்லை... சசிபெருமாள் மரணம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. விளக்கம்
கன்னியாகுமரி : டாஸ்மாக் கடை மூட வலியுறுத்திய போது சசிபெருமாள் மரணமடைந்தது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
பொதுமக்கள் நெருங்கவிடாததால் தான் சசிபெருமாளைத் தடுக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், காந்தியவாதியுமான சசிபெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் திடீரென 200 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் நடத்திய போது, உடல் நிலை திடீரென்று பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கினார்.
டவரின் மீதிருந்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது மரணம் குறித்து விளக்கமளித்துள்ள கன்னியாகுமரி எஸ்.பி., மணிவண்ணன், ஏழு நாளில் சம்பந்தப்பட்ட கடையை அடைக்க உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கடையை இன்றே அடைக்க வேண்டும் என சசிபெருமாள் வலியுறுத்தியதாகவும் கூறினார். கயிறு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் சசிபெருமாள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும், மக்கள் நெருங்க விடாதால், போலீசாரால் சசிபெருமாளை தடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சசிபெருமாள் உயிரிழப்பு குறித்து தற்கொலை என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய கன்னியாகுமரி எஸ்.பி. மணிவண்ணன், பிரேத பரிசோதனை முடிந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.












Click it and Unblock the Notifications