தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.. இரட்டை ரயில் பாதைக்கு அடிக்கல்
கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கான அடிக்கலை ரயில்வேத்துறை இணை அமைச்சர் ராஜென் கோஹெய்ன் நாட்டினார்
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான இரட்டை ரயில் பாதை திட்டத்தை மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ராஜென் கோஹெய்ன் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான இரட்டை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது இருந்தது. இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மதுரை - வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் ஆகிய பிரிவுகளில் இரட்டை ரயில் பாதை அமைக்க நான்காயிரத்து இருநூற்று ஐம்பது கோடி ரூபாயில் திட்டம் தயார் செய்யப்பட்டு அந்த திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜென் கோஹெய்ன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் நாகர்கோவில் ரயில் நிலைய 2 மற்றும் மூன்றாவது நடைமேடையில் நகரும் படிகட்டுகளையும், 100 சதவீத மின்விளக்குகள் மற்றும் இலவச வை- ஃபை வசதி சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் , தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.