யானைப்பசிக்கு சோளப்பொறி தான் அரசு காட்டும் பாதிப்பு கணக்கு... குமுறும் குமரி விவசாயிகள்!
யானைப்பசிக்கு சோளப்பொறியாகத் தான் அரசு பாதிப்பு கணக்குகளை காட்டுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் ஓகி புயல் பாதித்த பகுதிகளை அரசு குறைத்து காண்பிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரியில் ஓகி புயல் பாதித்த பகுதிகளை இன்று பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிடுவார் என்று கூறப்பட்டது. இதற்காக கன்னியாகுமரி வந்துள்ள பிரதமர் மோடி அரசு விருந்தினர் மாளிகைளில் வைத்து அதிகாரிகள், முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டமீனவர்கள் மற்றும் விவசாயிகளை அழைத்து பேசியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் நேரில் ஆய்வு நடத்தாமல் அரசினர் விருந்தினர் மாளிகையில் வைத்தே பாதிப்பை கண்டறிகிறார். ஓகி புயலால் குமரி மாவட்டமே உருக்குலைந்திருக்கும் நிலையில் நேரில் பார்வையிடாமல் ஒரு இடத்தில் சிலரை மட்டும் அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்துவதை எப்படி ஏற்க முடியும் என்பது விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.
புயலுக்கு ரப்பர் மற்றும் வாழை விவசாயம் உள்ளிட்டவை கடுமையான சேதத்தை கண்டுள்ள நிலையில் அரசு 10 சதவீதம் மட்டுமே இழப்பை காட்டுகிறது. புயல் காரணமாக சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் ரப்பர் மரங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. பாதிப்புகள் குறித்து நேரில் பார்வையிடாமல் ஒரு இடத்தில் வைத்து அரசு தரும் அறிக்கையை பிரதமர் கணக்கில் எடுத்துக்கொள்வதை ஏற்க முடியாது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஓகியால் மிகப்பெரிய அளவில் சேதம் கண்டுள்ள நிலையில் யானைப் பசிக்கு சோளப்பொறியாகவே அரசின் நிவாரணம் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட நிலையில் வெளி மாநிலத்திற்கு வேலை தேடி செல்வதை விட வேறு வழியில்லை என்ற நிலையில் தான் தற்போதைய நிலவரம் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications