கன்னியாகுமரி கொத்தனாரின் விபரீத செயல்.. பந்தயத்துக்காக குடித்த ஃபுல் பாட்டில் . உயிருக்கே ஆபத்து!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரூ.500 பந்தயத்திற்காக ஒரு ஃபுல் பாட்டில் மதுபானத்தை அப்படியே குடித்து, சரிந்து விழுந்த சுபின் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடி போதையில் மனிதர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபடுவார்கள். குடி வெறியில் ஏராளமான குற்றச் சம்பவங்களும் நடப்பதைப் பார்க்கிறோம். குடி மயக்கம் தரும் மகிழ்ச்சியில் விபரீத எண்ணங்களால் தங்கள் உயிருக்கே உலை வைத்துக்கொண்ட நபர்களும் உண்டு.

இப்படித்தான் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சுபின் என்பவர் செய்த விபரீதம் அவரது உயிருக்கே ஆபத்தை விளைவித்துள்ளது. கட்டிட தொழிலாளியான சுபினுக்கு 40 வயது. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது போதை விவாதத்தில் விபரீதமான பந்தயம் ஒன்றை கட்டியுள்ளனர்.
ஒரு ஃபுல் பாட்டில் மதுபானத்தை குடித்தால் ரூ.500 கொடுப்பதாக நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர். இதையடுத்து ரூ.500 பந்தயத்திற்காக ஒரு ஃபுல் பாட்டில் மதுபானத்தை அப்படியே குடித்து, சரிந்து விழுந்துள்ளார் சுபின். அவரது நண்பர்கள் அவரை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால், அவரால் அசையக்கூட முடியவில்லை.
இதையடுத்து, சுபின் உயிரிழந்து விட்டதாக கருதி, பயந்து போன நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்றவர்கள் சுபின் சுயநினைவின்றிக் கிடப்பதைப் பார்த்துள்ளனர். இதையடுத்து, இறந்த நிலையில் ஒருவர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இறந்த நிலையில் ஒருவர் கிடப்பதாக வந்த தகவலை வைத்து அங்கு சென்ற போலீசார், சுபின் உயிரோடு இருப்பதைக் கண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கட்டிடத் தொழிலாஇயான சுபின், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 500 ரூபாய் பந்தயத்துக்காக கட்டிட தொழிலாளி உயிரைப் பணயம் வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications