கன்னியாகுமரியை இன்னொரு புயல் தாக்காது... வதந்தியை நம்பாதீர்கள் - வெதர்மேன்
கன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது, அதை கன்னியாகுமரி மக்கள் நம்பாதீர்கள் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
சென்னை: கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்யக்கூடும், புயல் தாக்கும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஓகி புயலின் கோரத்தாண்டவத்தினால் கன்னியாகுமரி மாவட்டம் சின்னாபின்னமாகியுள்ளது. அதன் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. இந்த நிலையில் இன்னொரு புயல் கன்னியாகுமரியை தாக்கும் என்ற வதந்தி பரவி வருகிறது.
ஆனால் இன்னொரு புயல் தாக்க வாய்ப்பு இல்லை என்று வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.

மழை பெய்யும்
இது தொடர்பாக இன்று அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஓகி புயல் தாக்கிய கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும்.

அதிர்ஷ்ட மழை
ராமநாதபுரத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த வரும் நாட்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டமிருந்தால், மதுரையில் கூட மழை பெய்யலாம். ஓகி புயல் தாக்கிய கேரளாவின் தென் பகுதியில் கூட நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

ஓடிசா கடற்கரை பகுதி
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுமண்டலமாக மாறி ஒடிசா கடற்கரைக்கு அருகே நகர்ந்துவிட்டது. அந்த காற்று தென் மாநிலங்களுக்கு சாதகமாக இருப்பதால், மழை கிடைக்கும்.

வதந்தியை நம்பவேண்டாம்
கன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற செய்தி வதந்தியாக பரவுகிறது, அதை கன்னியாகுமரி மக்கள் நம்ப வேண்டாம். அங்கு மிதமான மழை பெய்யக்கூடும். அச்சப்படத் தேவையில்லை.












Click it and Unblock the Notifications