திருக்குறள் விழிப்புணர்வு வர வேண்டுமானால், குறள் ரயிலை தினசரி ஓட்டுங்கள்!
நாகர்கோவில்: மத்திய அரசு திருக்குறளையும் திருவள்ளுவரையும் சிறப்பிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இதன் ஒரு நிகழ்சியாக இம்மாதம் 11ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் தலைமையில் "திருக்குறள் திருப்பயணம்' என்ற வாகனப் பேரணி கன்னியாகுமரியில் நடந்தது..

இப்பயணம் திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியே சென்னையில் நிறைவடையும். திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக கடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் திருக்குறள் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி,மதுரை, திருச்சி, சென்னை, விஜயவாடா, நாக்பூர், போபால் வழியாக 25 ரயில் நிலையங்களில் நின்று இந்தியாவின் தலைநகரான டெல்லியின், நிஜாமுதீனுக்கு (12641/12642 எண்) ரயில் அறிவிக்கபட்டு 2002ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த திருக்குறள் ரயிலில் வைத்து, திருக்குறள் திருப்பயணத்தை, குமரி முதல் டெல்லி வரை கொண்டாட திருக்குறள் ஆர்வலர்கள் மற்றும் தமிழ்அறிஞர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
திருக்குறள் பெயரில் வாரத்துக்கு இரண்டுநாள் இயக்கப்பட்டு வரும் இந்த ரயிலை மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலபடுத்துவதற்கு உடனடியாக தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு தினசரி ரயிலாக இயக்கினால் மட்டுமே மக்கள் மத்தியில் திருக்குறள் பெயரில் ஓர் ரயில் இயக்கப்படுகிறது என்று பெரிய அளவில் தெரியும்.
இவ்வாறு தினசரி ரயிலாக அறிவித்து அந்த தினசரி ரயிலின் துவக்கவிழா கன்னியாகுமரியில் வைத்து நடத்த வேண்டும். இவ்வாறு நடத்தும் அந்த துவக்கவிழா சிறப்பு ரயிலை "திருக்குறள் திருப்பயணம்" ரயிலாக அறிவித்து குமரி முதல் டெல்லி வரை ரயில் வழித்தடத்தில் சிறிய மற்றும் பெரிய ரயில் நிலையங்களாக உள்ள சுமார் 450 ரயில் நிலையங்களிலும் ஒரு நிமிடம் நின்று திருக்குறளின் பெருமையை அனைத்து பகுதி மக்களுக்கும் அவர்கள் தாய் மொழியில் கொண்டு செல்ல வேண்டும்.
இது மட்டுமில்லாமல் இந்த ரயிலின் உள்ள அனைத்து பெட்டிகளிலும் வெளிபுறத்தில் நிரந்தரமாக வித்தியாசமான முறையில் பெயின்ட் அடித்து திருக்குறளின் பெருமைகளையும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் படத்தையும் வைக்க வேண்டும். இவ்வாறு செய்து இயக்கும் போது இந்த தினசரி ரயில் நின்று செல்லும் 25 ரயில் நிலையங்களிலும் பயணிக்கும் போது வருடத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி குமரி முதல் டெல்லி வரை உள்ள 2919 கி.மீ தூரத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் திருக்குறளின் பெருமை தெரியும்.
இது திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது மட்டுமில்லாமல் இந்த ரயிலில் தினசரி பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் அவரவர் தாய்மொழியில் திருக்குறள் புத்தகத்தை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி ரயில் பயணிகள் சங்க நிர்வாகி எட்வர்ட் ஜெனி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலும் இதை குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications