கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் - ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களை தனித் தனியாக இயக்க ரயில்வே திட்டம்!
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ஐலண்ட் எக்ஸ்பிரஸ் அகிய இரண்டு ரயில்களை இனி தனித்தனி ரயில்களாக இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பெங்களூருவிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டும் தனித்தனி ரயில்களாக இயக்கப்பட உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களில் மிகவும் நம்பிக்கையான முக்கிய ரயில். இந்த ரயிலில் நாகர்கோயிலில் இருந்து சராசரியாக 1000 பேர் வரை சென்னைக்கு பயணம் செய்கின்றனர். பல நேரங்களில் பயணிகள் நெரிசலும் ஏற்படும். நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு வரும் வருவாயில் ஐம்பது சதவிகிதம் இந்த ரயில் மூலம் கிடைத்துவருகிறது.

சரியான நேரத்துக்கு இயக்கப்படும் ரயில் என்ற நம்பிக்கையைப் பெற்றிருந்த இந்த ரயில் சில ஆண்டுகளாக அந்த நம்பிக்கையை இழக்கும் விதமாக இயக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் காலையில் கன்னியாகுமரி வந்துவிட்டு நாகர்கோவிலுக்கு தண்ணீர்பிடிப்பதற்கு வேண்டி வந்துவிட்டு காலையிலிருந்து மாலைவரை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
இதைப்போல் பெங்களூருவிலிருந்து புறப்படும் கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் மாலை கன்னியாகுமரிக்கு வந்துவிட்டு மறுநாள் காலை 9:00 மணிவரை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் காலியாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு இரண்டு ரயில்களும் நிறுத்திவைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இரண்டு ரயில்களும் இணைப்பு ரயில்களாக இயக்கப்பட்டுவருகின்றன. அதாவது, அதிகாலை 06:50 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்து சேரும் சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் காலிபெட்டிகள் கன்னியாகுமரி - பெங்களூரு ரயிலாக கன்னியாகுமரியிலிருந்து 10:30 மணிக்கு புறப்பட்டு செல்லுமாறு இயக்கப்பட்டு வருகின்றன.
அதே போல, மறுமார்க்கத்தில் பெங்களுரிலிருந்து கன்னியாகுமரி வரும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் கன்னியாகுமரியிலிருந்து சென்னை மார்க்கமாக கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலாக புறப்பட்டு செல்லுமாறு இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படுவதால் தினசரி பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு செட் ரயில் பெட்டிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் காலியாக நிறுத்தி வைப்பது தவிர்க்கப்படுகிறது. இதனால் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிலவி வந்த இடநெருக்கடி ஓரளவுக்கு குறைக்கப்பட்டது.
ஆனால், இவ்வாறு இணைப்பு ரயிலாக இயக்கப்பட்ட காரணத்தால் கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் அதிக நாட்கள் காலதாமதமாக இயக்கப்பட்டு வந்துது. இதனால் குமரி மாவட்ட பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் இந்த ரயில் இயக்க தேவையான பெங்களூருவிலிருந்து கன்னியாகுமரி வரும் ரயில் தாமதமாக வந்த காரணத்தால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குமரி மாவட்ட பயணிகள் rake sharing arrangement என்று சொல்லப்படும் இந்த இணைப்பு ரயில் திட்டத்தை ரத்து செய்து முன்பை போல தனித்தனி ரயில்களாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பயனிகளின் கோரிக்கையை ஏற்ற ரயில்வேத்துறை தற்போது இந்த திட்டத்தை ரத்து செய்து தனித்தனி ரயில்களாக இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இது ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.
ஒருவேளை இது தொழில்நுட்ப காரணங்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லையென்றால் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி புதிய ரயில் கால அட்டவணை
வெளியிடப்பட உள்ளது. இந்த புதிய ரயில் காலஅட்டவணையில் இந்த ரயில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் இனி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சரியான காலஅட்டவணையில் இயக்கப்படும். அதே போல, கன்னியாகுமரி - சென்னை ரயில் இதற்கு முன்பு பெங்களுரில் பராமரிப்பு செய்யப்பட்டு வந்தது. புதிய திட்டத்தின் படி இனி சென்னை - தூத்துக்குடி முத்துநகர் ரயிலுடன் இணைப்பு ரயில் rake sharing arrangement ஏற்படுத்தி தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி செய்யப்பட உள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கன்னியாகுமரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணத்துக்கு வரும் பயணிகளும் இந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலேயே நம்பியுள்ளனர். சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மீக யாத்ரீகர்கள் அதிக நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிடுவதால்; குமரி மாவட்ட பயணிகளுக்கு இந்த ரயிலில் முன்பதிவு கிடைப்பது என்பது மிகவும் அரிதாகவே உள்ளது.
அதனால், நாகர்கோவிலிருந்து சென்னைக்கு, நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர ரயில், நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில் என இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களை தினசரி ரயில்களாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாராந்திர ரயில்கள் நாகர்கோவிலிருந்து தினசரி ரயில்களாக இயக்கப்பட்டால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்போது உள்ள இடநெருக்கடி குறைந்து சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் இருக்கைகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications