கோலாகல திறப்பு.. மீண்டும் பள்ளிக்கு வந்த மாணாக்கர்கள்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி கோடை விடுமுறை முடிந்து இன்று (07.06.2017) கோலாகலமாகத் துவங்கியது.
துவக்க விழாவிற்கு காரைக்குடி நகராட்சி ஆணையாளர் திருமதி. சுந்தரம்பாள் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா வரவேற்றார்.
ஆணையாளர் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கினார்.
மாணவர் குறிப்பேடு
2017 -18ம் கல்வியாண்டிற்கான மாணவர் குறிப்பேடு (DIARY) நகராட்சி ஆணையாளர் வெளியிட பட்டதாரி ஆசிரியர் ஜெயமாலினி பெற்றுக் கொண்டார்.
பள்ளி பை
இக்கல்வியாண்டிற்கான பள்ளியின் பெயர் அச்சிடப்பட்ட பையை நகராட்சி ஆணையாளர் கொடுக்க, பட்டதாரி ஆசிரியர் சரவணன் பெற்றுக் கொண்டார்.
மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு
2016 -17ம் கல்வியாண்டில் 705 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 930ஆக அதிகரித்ததற்காக நகராட்சி ஆணையாளர், தலைமையாசிரியர் அவர்களையும், ஆசிரிய பெருமக்களையும், பாராட்டினார்.
தலைமை ஆசிரியரின் அறிவுரை
தலைமையாசிரியர் பீட்டர் ராஜா மாணவர்கள் ஒழுக்கத்துடனும், பண்போடும் நடந்து கொள்ள வேண்டும். 2017 -18 ம் கல்வியாண்டில் மாணவர்கள் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க இப்போதிருந்தே தயாராக வேண்டும் என அறிவுரை கூறினார்.
டை கட்டும் பயிற்சி
புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளியின் விதிமுறைகளும், நேர்த்தியான சீருடையில் வரவேண்டும் என்ற நோக்கத்தோடு டை கட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிறப்பான ஏற்பாடுகள்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி, கோமதி செய்திருந்தார்கள். பட்டதாரி ஆசிரியர் முத்துவேல்ராஜன் நன்றி கூறினார்.