செம்மரக் கடத்தல் கும்பல் தலைவி "பெண் வீரப்பன்" மோகனா வேலூர் கோர்ட்டில் சரண்.!!
வேலூர்: செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மோகனாம்பாள், வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பிரபாகரன் முன்னிலையில் சரண் அடைந்தார்.
வேலூர் வசந்தபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் கரகாட்டக்காரி மோகனாம்பாள். காட்பாடியில் கெஜராஜ முதலி தெருவில் ஜமுனா என்பவர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்த நிலையில் திடீர் என்று மோகனாம்பாளிடம் கட்டுக்கட்டாக பணம் புழங்கியது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி போலீசுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. உடனே காட்பாடி போலீசார் மோகனாம்பாள் வீட்டில் கடந்த 25-ந்தேதி இரவு அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் மற்றும் 73 பவுன் தங்க நகைகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் போலீசார் வருவதை அறிந்த மோகனாம்பாள் தலைமறைவாகிவிட்டார்.
சாதாரண கரகாட்ட பெண் வீட்டில் இவ்வளவு பணம் - நகையா? என அதிர்ச்சி அடைந்த போலீசார் மோகனாம்பாள் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தனர்.
மோகனாம்பாளுக்கு வேலூர் வசந்தபுரத்தில் சொந்த வீடு உள்ளது. அங்கு அவர் வசிக்காமல் காட்பாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சட்டவிரோத செயல்கள் மூலம்தான் இந்த அளவுக்கு பணம் - நகைகள் சேர்த்து இருப்பார் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர்.
செம்மரக்கடத்தல்
இதற்கு உடந்தையாக மோகனாம்பாளின் அக்கா நிர்மலா அவரது மகன் சரவணன் ஆகியோர் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. சரவணன் பற்றி விசாரணை நடத்திய போது அவன் செம்மரக் கடத்தல்காரன் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்தது. எனவே மோகனாம்பாள் வீட்டில் சிக்கியது செம்மரக் கடத்தலில் சேர்த்த பணம் என்று தெரிய வந்தது.
மோகனாம்பாள் கூட்டு
கடந்த 2 ஆண்டுகளாக செம்மரக் கடத்தலில் முக்கிய புள்ளியாக சரவணன் மாறினான். செம்மரக் கடத்தல் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தான். சரவணன் தனக்கு உதவியாக சித்தி மோகனாம்பாளை கூட்டு சேர்த்துக் கொண்டார். இருவரும் செம்மரக் கடத்தலில் கைகோர்த்து செயல்பட்டு வந்தனர்.
அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு
மேலும் பல்வேறு முக்கிய புள்ளிகளுக்கு செம்மரங்கள் விற்பனை செய்து கொடுக்கும் புரோக்கர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. அந்தப் பணத்தைத்தான் மோகனாம்பாள் தனது வீட்டில் பதுக்கி வைத்துள்ளார்.
25 ஏக்கர் நிலம்
போலீசார் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் சொந்த வீடு இருந்தும் அதில் பணத்தை பதுக்கி வைக்காமல் வாடகைக்கு வீடு எடுத்து அதில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். மேலும் வட்டிதொழிலும் செய்து வந்துள்ளார்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மோகனாம்பாள் வேலூரில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் சித்தூர்-திருப்பதி 52 ஏக்கர் நிலம் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவானர்களை தேடி வந்தனர்.
திமுக பிரமுகர் கைது
சரவணனின் மனைவி தேவிபாலா, மோகனாம்பாளின் அக்கா நிர்மலாவின் மூத்த மகன் பழனி(40) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மோகனாம்பாளுக்கு உதவியதாக அணைக்கட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பாபுவையும் போலீசார் கைது செய்தனர். இருப்பினும் மோகனாம்பாள் உட்பட முக்கிய குற்றவாளிகள் யாரும் இதுவரை போலீசில் சிக்காமல் இருந்து வந்தனர்.
இடம்மாறிய மோகனா
ஒவ்வொரு நாளும் அவர்கள் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே வந்தனர். கடைசியாக ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து மோகனாம்பாள் செல்போனில் பேசியது தெரியவந்தது. அதன் பிறகு அவர்கள் எந்த செல்போன் நம்பரில் உள்ளனர் என்பது மர்மமாகி விட்டது.
முக்கிய புள்ளியுடன் நெருக்கம்
அவருக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களுடன் தொடர்பு இருந்ததும், பலமுக்கிய புள்ளிகள் மோனாம்பாளிடம் மிகவும் நெருக்கமாக இருந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
வேலூர் கோட்டில் சரண்
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக போலீசாருக்கு ஆட்டம் காட்டி வந்த மோகனாம்பாள் வேலூர் ஜே.எம்.5 வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பிரபாகரன் முன்னிலையில் இன்று காலை 11 மணியளவில் சரணடைந்தார். அவருடன் அவரது அக்கா நிர்மலாவும் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரவணன் எங்குள்ளார் என்பது குறித்த தகவல் இல்லை.
போலீஸ் காவலில் விசாரணை
நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள மோகனாம்பாளை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால் தான் ரூ.4 கோடி பணம், நகைகள், சொத்துக்கள் பற்றிய தகவல்கள் தெரியவரும்.












Click it and Unblock the Notifications