கர்நாடகா பந்த் முடிந்தது..... இயல்புநிலை திரும்பியது: பேருந்துகள் இயக்கம்
ஓசூர்: காவிரியின் குறுக்கே அணைகட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்துக்குக் கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் நடைபெற்ற பந்த் காரணமாக எல்லைப்பகுதிகளில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.
குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்காக மேகதாது அருகில் காவிரி நதி குறுக்கே அணை கட்டுகிறோம் என்று கர்நாடக அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தைக் கண்டித்தும் மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தியும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் இயங்கின
இந்த முழு அடைப்பு போராட்டத்தை அடுத்து, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட கோட்டங்களில் இருந்து கர்நாடகாவிற்கு அதிகளவில் பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். ஆனால் கர்நாடகத்தில் இன்று நடைபெற்ற முழு அடைப்பு காரணமாக தமிழகத்தில் இருந்து அம்மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகள் எல்லைப்பகுதிகள் வரை மட்டுமே இயக்கப்பட்டன. மாலையில் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையில்...
சென்னை கோயம்பேட்டுக்கு கர்நாடகாவில் இருந்து வரும் 17 பேருந்துகளும் இயக்கப்படவில்லை. சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் ஓசூரில் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல இயக்கப்பட்டன.
பண்ணாரியில் இருந்து
இதேபோல ஈரோடு, திருப்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், மைசூர், கொள்ளேகால் மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்துகளும் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான புளிஞ்சூர் வரை சென்று திரும்பின. இந்தப் பகுதி வழியாக செல்லும் சரக்கு லாரிகளும் வேன்களும் நிறுத்தப்பட்டன பண்ணாரி சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளும், பேருந்துகளும் மாலை 6 மணிக்கு மேல் கர்நாடகாவிற்கு புறப்பட்டு சென்றன.
மாதேஸ்வரன் மலை
சேலம் மற்றும் மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலை வழியாக கர்நாடக மாநிலம் கொள்ளேகால் மற்றும் மைசூருக்கு இயக்கப்பட்டு வந்த தமிழக அரசு பேருந்துகள் மாதேஸ்வரன் மலை வரை மட்டுமே இயக்கப்பட்டன. மாலையில் இயல்புநிலை திரும்பியதை அடுத்து பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டன.
போலீஸ் குவிப்பு
நீலகிரி-கர்நாடக எல்லையிலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் உதகையில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இன்று காலை முதல் இங்கிருந்து பேருந்துகள் எதுவும் புறப்பட்டு செல்லவில்லை கர்நாடகாவில் இருந்தும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நீலகிரிக்கு வரவில்லை. கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனை சாவடியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். மாலை இயல்புநிலை திரும்பியதை அடுத்து உதகையில் இருந்து கர்நாடகாவிற்கு பேருந்துகள் இயக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணிகள் அவதி
இதனிடையே இன்று நடைபெறும் பந்த் காரணமாக நள்ளிரவு முதல் தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டது. அதன்படி கர்நாடகா செல்லகூடிய 720 பேருந்துகளும் ஓசூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தபட்டன. இதே போல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் சுமார் 500 கர்நாடகா பேருந்துகள் அம்மாநிலத்தில் நிறுத்தப்பட்டன இதனால் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மாலை 6 மணியுடன் பந்த் முடிவுக்கு வந்த பின்னர் பேருந்துகள் வரிசையாக இயக்கப்பட்டதை அடுத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.












Click it and Unblock the Notifications