ஒசூர் எல்லையில் தமிழக வாகனம் மீது தாக்குதல்.. நடத்தியது கன்னட அமைப்பினர் இல்லை, கர்நாடக போலீசார்!
பெங்களூர்: தமிழக வாகனங்கள் மீது கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திய நிலை மாறி, இப்போது, போலீசாரே தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர்-ஒசூர் நடுவேயுள்ளது அத்திபெலே நகரம். இங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் சீனிவாஸ் என்பவர் கொலை வழக்கு ஒன்றின் விசாரணைக்காக மஃப்டியில் கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனத்தில் ஓசூருக்கு சென்றுள்ளார்.

ஆனால் கர்நாடக பதிவு எண் வாகனங்கள் எதுவும் தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படாத சூழ்நிலையில், இந்த வாகனத்தையும் தமிழக போலீசார் திரும்பி செல்ல கூறியுள்ளனர்.
ஆனால் சீனிவாஸ், தான் ஒரு போலீஸ்காரர் என கூறியுள்ளார். இதை நம்பாத, தமிழக போலீசார், ஐடி கார்டை காட்டுமாறு கேட்டுள்ளனர். ஆனால் சீனிவாஸ் தனது போலீஸ் அடையாள அட்டையை கொண்டு வராததால் அவரால் ஐடி கார்டை காண்பிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை எச்சரித்து திருப்பி அனுப்பினர் தமிழக போலீசார்.

இதனால் கடும் கோபத்தில் கர்நாடக எல்லைக்குள் திரும்பிய சீனிவாஸ், சக காவலர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனால் அந்த போலீசாரும் சேர்ந்து கொண்டு, கர்நாடக எல்லையிலிருந்து தமிழக எல்லைக்குள் நுழைய இருந்த ஒரு சில வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, போலீசாரே தங்கள் வாகனங்களை அடித்து உடைப்பதை பார்த்த வாகனத்திலிருந்தோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதையடுத்து இரு மாநில எல்லைகளிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி ரோகித் நாதன் கர்நாடக போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சமரசம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications