தமிழகத்தில் வெடித்தது போராட்டம்- கர்நாடகா வாகனங்கள் மீது சரமாரி தாக்குதல்- வங்கிகள் முற்றுகை!!
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. ராமேஸ்வரம் மற்றும் சீர்காழியில் அந்த மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படிதான் தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டது. ஆனால் இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பி போராட்டம் வெடித்தது.
அப்போது தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உட்லண்ஸ் ஹோட்டல் மீது தாக்குதல்
இதனிடையே இன்று சென்னை மயிலாப்பூர் உட்லண்ஸ் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை நடத்தியவர்கள் யார் என தெரியவில்லை.

ராமேஸ்வரத்தில்...
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனங்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கர்நாடகா சுற்றுலா பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சீர்காழியில்
இதனிடையே நாகை மாவட்டம் சீர்காழி அருகே கர்நாடக பதிவு எண் கொண்ட 2 வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். கர்நாடகாவில் இருந்த தமிழகத்திற்கு சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தினர் வைத்தீஸ்வரன் கோவில் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றனர்.
|
வெளியேற்றம்
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதேபோல சீர்காழி புறவழிச்சாலையில் இருந்த கர்நாடக லாரியின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சீர்காழியில் இருந்த கர்நாடகா வாகனங்கள் போலீசார் பாதுகாப்புடன் வெளியேற்றினர்.

சேலம்...
சேலத்தில் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது கர்நாடகா முதல்வர் சித்தராமையா உருவபொம்மை எரிக்கப்பட்டது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கர்நாடகா பதிவு எண் வாகனத்தை சிறைபிடித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications