ரஜினி, கமல் வேண்டாம், தமிழகத்தின் தேவை இவர் தான்... டி எம் கிருஷ்ணா ஓபன் அட்டாக்!
தமிழக அரசியல் களத்திற்கு ரஜினி, கமல் வேண்டாம், ஜிக்னேஷ் மேவானி போன்ற இளம் தலைவர்கள் தான் தேவை என்று கர்நாடக இசைக் கலைஞர் டி. எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழக அரசியல் களத்திற்கு ரஜினி, கமல் வேண்டாம், ஜிக்னேஷ் மேவானி போன்ற இளம் தலைவர்கள் தான் தேவை என்று கர்நாடக இசைக் கலைஞர் டி. எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஏதோ ஒரு சமூகத்தை சேர்ந்தவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதாக அரசில் இருக்கக் கூடாது. தமிழகம் பெரியாரின் சமூக நீதிக் கொள்கைளை நிறைவேற்றட்டும் என்றும் கிருஷ்ணா கூறியுள்ளார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு தேவையான அரசியல் தலைவர் யார் என்று விரிவாக எழுதியுள்ளார். 2016 டிசம்பரில் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு தமிழகத்தில் நிலவிய நிலையற்ற தன்மை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தமிழகத்தில் தற்போது ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் தான் பரபரப்பாக இருக்கிறது. ஊடகங்கள் சர்வேகள் மூலம் இவர்களின் அரசியல் வருகைக்கான உடனடி சான்றுகளை வெளியிட்டு வருகின்றன.
ஆனால் உண்மையில் இந்த நேரத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்வி ஏன் மிகப்பெரிய நட்சத்திரங்களான இரண்டு நடிகர்கள் திடீரென தங்களது பாதையை மாற்றி அரசியலை நோக்கி பயணிக்க நினைக்கிறார்கள், இதனால் என்ன பயன் என்பதே. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய அரசியல் பொது வாழ்வை நியாயப்படுத்தியதோடு இது தான் அரசியலுக்கு வர சரியான தருணம் என்றும் மக்களின் மனநிலையை கொண்டு வந்தார் கமல்.
கமலின் ஊழல் ஒழிப்பு பிரச்சாரம்
அதே சமயம் ரஜினி நீண்ட நாளாக இருந்த தன்னுடைய அரசியல் வருகை குறித்த பேச்சுகளுக்கு டிசம்பர் மாதத்தில் ஒரு முடிவைச் சொல்லி இருக்கிறார். கமல் ஊழலை ஒழிப்பேன் என்று தன்னுடைய பாதையை அமைத்திரக்கிறார். இதன் மூலம் மக்கள், அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஆனால் இதற்கு போதுமான ஊழல் ஒழிப்பு தளங்கள் போதுமான அளவில் இருக்கிறதா. உண்மையிலேயே ஊழல் பற்றி மக்கள் கவலைப்படுகின்றனரா?
தேர்தல் மட்டும் போதாது
இந்த விஷயத்தை பொறுத்த வரையில் நான் நினைப்பது என்னவென்றால், நாம் பல ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுகவால் ஊழலை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோம். ஊழல் ஒன்றும் அவ்வளவு பெரிய கெட்ட விஷயமல்ல என்பது தான் மக்களின் மனநிலை. இரண்டு கட்சிகளிடம் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் பணத்தை வாங்கிக் கொண்டு வேலையை முடிப்பார்கள், மற்றொருவர் காரியத்தை முடித்துக் கொடுப்பாரா என்பது உறுதியாக சொல்ல முடியாது என்பதே. எனவே பணம் என்பது இங்கு பிரச்னை, எப்படி அந்த காரியம் முடித்து கொடுக்கப்படுகிறது என்பதில் தான் இருக்கிறது. ஊழலை ஒழிப்பேன் என்று குரல் கொடுப்பவர்களின் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் வாய் வார்த்தைகளாகத் தான் இருக்கும். எனவே ஊழலை ஒழிப்பற்கு தேர்தல் என்ற ஒன்று மட்டுமே போதாது என்பது தான் என்னுடைய கருத்து.
சாதி இல்லாத அரசியல் சாத்தியமா?
ரஜினியும் சிஸ்டத்தில் உள்ள ஊழலை ஒழிப்பேன் என்கிறார். ஆனால் அதையும் தாண்டிய ஒரு விஷயத்தையும் அவர் சொல்லி இருக்கிறார், அதாவது அரசியலில் சாதி, பணம் என்பதைத் தாண்டி ஆன்மிகம் என்ற ஒன்றை புதிதாக சொல்லி இருக்கிறார். சாதி அரசியலை ஒழிப்பேன் என்கிற அர்த்தத்தில் ரஜினி பேசுகிறார் ஆனால் சாதி என்பது அரசியலில் மிக முக்கிய பங்காற்றுகிறது. சமூகத்தில் நிலவும் வேற்றுமைகளை களைய சாதியை சமன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அரசியலில் இருந்து சாதியை புறந்தள்ளுவது என்பது ஆபத்தானது என்பதோடு எதிர்ப்பைத் தான் இது அதிகரிக்கும். அரசியலில் சாதியை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் அதற்காக சாதியே இல்லாத அரசியல் செய்வேன் என்பது முடியவே முடியாத காரியம்.
ரஜினி, கமல் தெளிவுபடுத்துங்கள்
கமல் கூட சாதி அரசியலில் இருந்து விலகியே இருப்பதாக தன்னை காட்டிக் கொள்கிறார். தன்னை சாதிகளுக்கு அப்பாற்பட்டவராக காட்டிக் கொள்கிறார் என்றும் கூட சொல்லலாம். சாதி பாகுபாடுகளுக்கு கமல் கண்டனம் தெரிவிக்கலாம், அதற்கு எதிராகவும் இருக்கலாம், ஆனால் அவர் சார்ந்த சாதியினரிடம் இருந்து அவருக்கான பலாபலன்கள் கிடைக்கின்றன. சாதி என்பது அரசியலில் ஆதிக்கம் பெற்றது எனவே ரஜினியும், கமலும் இதில் தங்களது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் அதை செய்ய மறுக்கும் பட்சத்தில் சாதி என்பது வாக்கு வங்கி அரசியலாக சிதைந்து விடும்.
அரசியலில் ஆன்மிகம் பிரிவினை
இதே போன்று ரஜினி பயன்படுத்திய ஆன்மிக அரசியல் மிகப்பெரிய விவாதப் பொருளாகி இருக்கிறது. அரசியல் ரீதியில் பார்க்கும் போது இது அபாயமானதாகவே இருக்கிறது. தான் விரும்பும் ஒரு விஷயத்திலேயே சமூகமும் பயணிக்க வேண்டும் என்ற கருத்தின் வெளிப்பாடாகவே ரஜினி ஆன்மிக அரசியல் என்பதை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் ஆன்மிகம் என்பதும் பிரச்னைகளை ஏற்படுத்தும். ரீல் வாழ்வில் இருந்து தனக்கான மாற்று தோற்றத்தை உருவாக்கவே ஆன்மிக ஐகானாக தன்னை காட்டிக் கொள்கிறார் ரஜினி. அதே சமயம் ரஜினி இந்து மதக் கடவுள்களை மட்டுமே வழிபடுகிறார். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம், ஆனால் ஆன்மிகம் என்பதை அரசியலில் பயன்படுத்தும் போது அது பிரிவினையையே ஏற்படுத்தும்.
தேர்தலில் எதுவும் நடக்கலாம்?
தேர்தலில் பண விநியோகம் என்பது வாடிக்கையாகிவிட்டது, வாக்காளர்களும் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக அவர்கள் வாக்களிப்பார்கள் என்பது உறுதியல்ல. ஆர்கே நகர் தேர்தலில் நடந்தது என்ன என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், ஒரு விஷயம் மட்டும் தெளிவாக சொல்ல முடியும்: தமிழக மக்கள் பாய்ம நிலையில் உள்ளனர், நாம் அன்றாட விஷயங்களுக்கு அப்பாற்பட்டு அவர்களை பார்க்கிறோம். 2021 சட்டமன்ற தேர்தலில் என்ன நடக்கும் என்று யாராலும் அருதியிட்டு சொல்ல முடியாது.
தலைவர்களுக்காக வாக்களித்தவர்கள்
ஏனெனில் நாம் சின்னங்களுக்காகவும், தலைவர்களுக்காகவும் வாக்களித்தவர்கள். ரஜினியும், கமலும் தொடர்ந்து சினிமாவைத் தாண்டி நம்மை யோசிக்க வைப்பார்களா?அப்படி இல்லையென்றால் மக்களை ஈர்க்க அவர்கள் என்ன தேர்தல் வாக்குறுதிகளைத் தரப்போகிறார்கள். நாம் அந்த கோணத்தில் யோசித்து பார்க்க மாட்டோம், நம்முடைய முக்கியத்துவம் என்ன என்பதை அவர்களுக்கு புரிய வைக்கவும் காலம் தேவைப்படுகிறது
அனைவருமே மாற வேண்டும்
நாம் அனைவருமே மாற வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். தமிழ் சமூகம் மீண்டும் ஒரு சமூக புரட்சியை சந்திக்க வேண்டும், ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்ன என்பதை தட்டி எழுப்ப வேண்டும். இது இன்றே நடந்து விடாது, ஆனால் நிச்சயம் சாத்தியமே. ரஜினியும், கமலும் அதற்கான புதுப்பித்தல் காரணிகள் தான். அவர்களுக்கு இருக்கும் பிரபலத்தை வைத்து பாதி அளவு வெற்றி கண்டிருக்கலாம் ஆனால் உண்மையில் தமிழகத்தின் இன்றைய தேவை ஜிக்னேஷ் மேவானி போன்ற இளம் தலைவர்கள் தான்.
ஆதிக்கம் கூடாது
தமிழகம் கூட்டணி கட்சி ஆட்சிக் களமாக இருக்கலாம், இந்த கூட்டணி நீண்ட காலம் இருக்கலாம். எனினும் சமுதாயத்தின் பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இதில் அங்கம் வகிக்க வேண்டும். ஏதோ ஒரு சமூகத்தை சேர்ந்தவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதாக அது இருக்கக் கூடாது. தமிழகம் பெரியாரின் சமூக நீதிக் கொள்கைளை நிறைவேற்றட்டும் என்றும் கிருஷ்ணா கூறியுள்ளார்.