கார்த்தி சிதம்பரம் உருவாக்கிய ஜி 67... காங்கிரஸில் புது பரபரப்பு!
சென்னை: மேலிட அனுமதி இல்லாமல், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களுடன் கார்த்தி சிதம்பரம் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஜி.கே.வாசன் மீண்டும் தமாகா கட்சியைத் தொடங்கியதை அடுத்து, காங்கிரஸில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும் என ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் என எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வசம் சென்றது. இதனால், சிதம்பரம் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், நேற்று சென்னை ஆந்திரா கிளப்பில் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் திடீரென சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்தக் கூட்டத்தில், 1967ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் என்ற கணக்கில், 234 சட்டசபை தொகுதி களிலிருந்தும் தலா ஒருவர், இருவர் என தேர்வு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதில் இருந்தும் சுமார் 300 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் 1967க்குப் பின் காங்கிரஸ் ஆட்சி அமையாததால், இந்த அணிக்கு கார்த்தி சிதம்பரம் ‘ஜி 67' எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Shree Karti P Chidambaram "G 67" meeting. pic.twitter.com/h5R7oySzd8
— Palanivelraja.s (@s_palani) January 22, 2015 சோஷலிஸ்ட் பேரவை:
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்தும், அதில் கார்த்தி சிதம்பரம் பேசியது குறித்தும் சிதம்பரம் ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:
தமிழக காங்கிரஸில் வாசன் இருந்தவரை கட்சியை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவரது நடவடிக்கைகளால், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அவர் சென்றதும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவரானார். அதன் பிறகு, கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று ப.சிதம்பரம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். அதை இளங்கோவன் கண்டுகொள்ளவில்லை.
கட்சி தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதைக் கருத்தில் கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து தொகுதி வாரியாக 300-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். அவரவர் பகுதிகளில் சிதம்பரத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று வலிறுத்தி பலர் பேசினர். 2001-ல் தமாகாவில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வந்து ‘காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை' தொடங்கியதுபோல, ‘சோஷலிஸ்ட் பேரவை' என்ற அமைப்பை தற்போது தொடங்க வேண்டும் என்றும் சிலர் கூறினர். முதலில் காங்கிரஸில் நம்மை பலப்படுத்துங்கள் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
மதச்சார்பற்ற கட்சி என சொல்வதால் மட்டும், காங்கிரசை வளர்த்து விட முடியாது. வெற்று பேச்சால் கட்சி வளர்ந்து விடாது. ஆக்கப்பூர்வமான திட்டங்கள் தீட்டி செயல்படுத்த வேண்டும். தமிழக மக்களுக்கு பரிச்சயமான பிரபலமான முகத்தை, முதல்வர் வேட்பாளராக, காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும். திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பின்னால் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தமிழக மக்களிடம் டாஸ்மாக், சினிமா மோகம் உள்ளது. அதை ஒழிக்க, கட்சி மேலிடம் பாடுபட வேண்டும். 2016ல், காங்கிரஸ் ஆட்சி என சொல்வதால், ஆட்சி வந்து விடாது. மறைந்த தலைவர்களின் பிறந்த நாளையும், இறந்த நாளையும் கொண்டாடினால் மட்டும், கட்சி வளர்ந்து, ஆட்சியை பிடித்துவிட முடியாது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க கடுமையாக உழைக்க வேண்டும். 'பூத்' கமிட்டிகளின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்:
பொதுவாக இப்படி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்துவதென்றால் கட்சி மேலிட அனுமதி பெறவேண்டும். ஆனால், நேற்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இது தமிழக காங்கிரஸ் தலைவர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரிடம் சிலர் புகார் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப் பட்டவர்களிடம் நிச்சயம் விளக்கம் கேட்கப் படும் என்றும், கட்சி அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் கூட்டங்கள் நடத்துவது கட்சிக்கு விரோதமானது என்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுபற்றி கார்த்தி சிதம்பரம் அளித்த விளக்கத்தில், ‘‘இது என் தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. நட்பு ரீதியாக சிலரை சந்தித்தேன். அவ்வளவுதான்'' என்றார்.












Click it and Unblock the Notifications