ஞானதேசிகனைச் சந்தித்தார் 'தொப்பி' கார்த்திக்... தென் சென்னை அல்லது மதுரையில் போட்டி?
சென்னை: அரசியலில் ஒரு நிலையில்லாமல் உலா வந்து கொண்டிருக்கும் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் திடீரென காங்கிரஸ் பக்கம் கரை ஒதுங்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் தென் சென்னை தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்று தெரிகிறது. ஆனால் அவரை மதுரையில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறாராம்.
காங்கிரஸும் கார்த்திக்கைப் போலவே இந்த தேர்தலில் அனைவராலும் கைவிடப்பட்ட கட்சி என்பதால் கார்த்திக்கின் வருகையால் காங்கிரஸுக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் ஏமாற்றம்
பார்வர்ட் பிளாக்கில் சேர்ந்த காலம் முதலே கார்த்திக்குக்கு அரசியல் பெரும் ஏமாற்றம்தான். கடைசி நேரத்தில் அத்து விட்டு விடுவார்கள். வேட்பாளர்கள் ஓடிப் போய் விடுவார்கள். இவர் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தால் பெரும் கலாட்டா ஆகி விடும்.
கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில்
கடந்த லோகச்பா தேர்தலின்போது இவர் பாஜக கூட்டணியில் இணைந்தார். விருதுநகரில் இவரும், தேனியில் ஒரு பெண்மணியும் நிறுத்தப்பட்டனர். ஆனால் தேனி தொகுதி வேட்பாளர் கடைசி நேரத்தில் ஒதுங்கி விட்டார். கார்த்திக் மீதே நிறைய புகார்களைக கூறினார். கார்த்திக்கோ, விருதுநகரில் டெபாசிட் இழந்தார்.
அதிமுகவுடன் சேர பிரயத்தனம்
இதையடுத்து சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் சேர முயன்றார். ஆனால் ஜெயலலிதா இவரை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் அப்படியே ஒதுங்கி விட்டார். அரசியல் பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்தார்.
அழகிரியுடன் போனில் பேச்சு
இந்த நிலையில் வரும் தேர்தலில் என்ன செய்யலாம் என்று அவர் யோசித்து வந்த நேரத்தில், திடீரென மு.க.அழகிரிக்குப் போனைப் போட்டு உணர்ச்சிகரமாக பேசினார். ஆனால் தற்போது காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க களத்தில் குதித்துள்ளார்.
டெல்லியில் தலைவர்களுடன் சந்திப்பு
இதையடுத்து டெல்லிக்குப் போய் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசினாராம். அவர்களிடம் நெல்லை, தேனி கொடுங்க கூட்டணி வைக்கலாம் என்றாராம்.
மதுரை மட்டுந்தேன்...
ஆனால் அங்குள்ளவர்களோ மதுரை மட்டும்தான் தர முடியும். மற்றவற்றுக்கு வாய்ப்பில்லை என்று கூறி விட்டனாரம்.
தென் சென்னையை எடுத்துக்கங்களேன்...
இதனால் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய கார்த்திக், தமிழக தலைவர் ஞானதேசிகனைச் சந்தித்துப் பேசினார். அப்போது தென் சென்னைதான் பாக்கி உள்ளது. பேசாமல் அங்கு நீங்களே போட்டியிடுங்களேன் என்றாராம்.
இல்லை, மதுரை போதும்
ஆனால் மதுரைதான் காலியாக இருப்பதாக கட்சி மேலிடம் கூறுகிறதே. அதையே கொடுங்கள், 39 தொகுதிகளிலும் நான் சூறாவளி பிரசாரம் செய்கிறேன் என்றாராம். சரி சீக்கிரமே நல்ல முடிவாகச் சொல்கிறேன் என்று கூறி கார்த்திக்கை அனுப்பி வைத்துள்ளாராம் ஞானதேசிகன்.