கருணாஸை எதிர்த்து மோதுகிறோம்.. ஆனால் மனம் புண்படாமல் பார்த்துப்போம்.. கார்த்திக் ராக்ஸ்!
சென்னை: சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் தொடங்கி, அது முடிந்து, மனுக்கள் பரிசீலனை முடிந்து, மனு வாபஸ் அவகாசமும் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகி விட்ட நிலையில் தனது கூட்டணி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று அறிவித்துள்ளார் விடியல் கூட்டணியின் தலைவர் நடிகர் கார்த்திக்.
Think differently but behave indifferently என்ற புது மொழியைப் படைத்தவர் கார்த்திக். அரசியலில் இவர் போகும் பாதையை இவரால் கூட சரியாக கணிக்கவே முடியாது. அப்படி ஒரு பயணம் இவருடையது.
நடப்பு சட்டசபைத் தேர்தலில் இவரது அணுகுமுறைகள் அனைவரையும் குழப்பி, கடைசியில் அவரும் குழம்பி, எந்தக் கூட்டணியிலும் இடம் பெற முடியாமல் அவரே ஒரு கூட்டணியை உருவாக்கி, அதுவும் 2 முறை உடைந்து என ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்து போய் விட்டன.

அதாவது என்னன்னா!
இப்போது திடீரென ஒரு பிரஸ் மீட் வைத்து தங்களது கூட்டணி குறித்த சில விஷயங்களைக் கூறியுள்ளார் கார்த்திக். அவர் கூறுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் விடியல் கூட்டணி 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

சிலதை நிராகரிச்சுட்டாங்க
சில தொகுதிகளில் விடியல் கூட்டணி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சாதாரண காரணங்களுக்காக நிராகரித்துள்ளனர். Its wrong. அவற்றை விடுத்து சிவசேனா கட்சி 35 தொகுதிகளிலும், தமிழக மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், நாடாளும் மக்கள் கட்சி 13 தொகுதிகளிலும் என 50 தொகுதிகளில் விடியல் கூட்டணி போட்டியிடுகின்றன.

இன்று முதல் பிரச்சாரம்
எங்களது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, இன்று முதல் நான் பிரச்சாரம் செய்ய உள்ளேன். தனி நபர் தாக்குதலை மையப்படுத்தி வாக்கு கேட்டு வருகின்றனர். மக்களிடம் உள்ள பொதுவான பிரச்னைகளை முன் வைத்தே விடியல் கூட்டணி வாக்கு சேகரிக்கும். தனி நபர் தாக்குதல் இருக்காது.

கருணாஸுடன் மோதுகிறோம்
நடிகர் கருணாஸ் போட்டியிடும் திருவாடானை தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடுகிறது. அவர் மீது நன்மதிப்பு உள்ளது. எந்த வகையிலும் அவரது மனம் பாதிக்கும் வகையில், விடியல் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபடாது.

ஜெயலலிதா மீதும் மரியாதை உண்டு
அதேபோல, முதல்வர் ஜெயலலிதா மீது தனிப்பட்ட மரியாதை உண்டு. அதனால் அவர் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கூறினார் கார்த்திக்.

பார்த்து பாஸ்!
பார்த்து பாஸ்.. திருவாடானைக்கு வந்தப்போ, கருணாஸ் "பவன்டோ" வாங்கிக் கொடுத்தாரு, மனசெல்லாம் குளிர்ந்து போச்சுன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு டப்புன்னு மெட்ராஸுக்குக் கிளம்பிப் போயிராதீங்க!












Click it and Unblock the Notifications