'தொப்பி' கார்த்திக் பேட்டி 'பாகம் 2'... கூடுதல் 'பரபரப்பு' தகவல்களுடன்....!
தேனி: எங்கள் ஆதரவின்றி யாரும் ஆட்சியமைக்க முடியாது என்று பெரும் பரபரப்புத் தகவலை லீக் செய்துள்ளார் நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.
தொப்பி சகிதம் அவர் தேனியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போதுதான் இந்த பெரும் பரபரப்பான தகவலை வெளியிட்டு அவரைத் தவிர மற்ற அனைவரையும் அதிர வைத்தார்.
சற்றும் பதட்டமில்லாமல் வழக்கம் போல சிரித்தபடி அவர் பேசப் பேச கேட்ட அனைவருக்கும் நம்ம தலைதானா இப்படிப் பேசுராரு என்று ஆச்சரியத்தில் புல்லரித்துப் போய் விட்டிருந்ததாம்...
கார்த்திக் பேச்சின் 2ம் பாகம் இதோ..
விதை விருட்சமாகி.. ஆலமரமாகி... இந்தியாவில்தான் இருக்கோமா...
இன்று நாம் விதைத்த விதை 2 மாதத்தில் விருட்சமாகி ஆலமரமாக மாறும். தமிழகம் தற்போது இந்தியாவில்தான் இருக்கிறதா? என்பதே சந்தேகமாக உள்ளது.
தனியா விட்டுட்டாங்களே தமிழர்களை...
தமிழன் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறான். இதுவரை நாம் ஏமாற்றப்பட்டோம். இனி ஏமாற்றியவர்கள்தான் ஏமாறவேண்டும்.
தயவின்றி ஆட்சியமைக்க முடியாதப்பு...
இனி நாடாளும் மக்கள் கட்சியின் தயவின்றி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
நான் சென்னை போனதும்...
நான் சென்னை சென்றதும் ஒரு வாரத்தில் நல்ல சேதி வரும். அதன் மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் நல்ல காலம் பிறக்கும்.
ஸ்வீட் கொடு.. கொண்டாடு
அந்த நல்ல காலம் பிறந்ததும், அப்போது விழா கொண்டாடுங்கள்.
எல்லாருமே ஏமாத்திட்டாங்க...
இதுவரை இங்கு இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் தமிழ் மக்களை ஏமாற்றி வந்து இருக்கிறார்கள். மக்கள் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லை.
தேனியில் போட்டியிடுவேன்.. ஸ்யூர்...
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக நான் தேனி தொகுதியில் போட்டியிடுவேன் .இரண்டு தேசிய கட்சிகள் மற்றும் ஒரு மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டுவருகிறது.
5 தொகுதிகளில்.. நிறுத்துவோம்...
விருதுநகர்,தேனி ,நெல்லை,தென்காசி ,தூத்துக்குடி உட்பட ஐந்து தொகுதிகளில் எங்களது கட்சியின் வேட்பளர்கள் நிறுத்தப்படுவார்கள், எங்கள் கட்சியில் அனைத்து சாதி மக்களும் உறுப்பினராக இருக்கிறார்கள்.
சீனாவுக்குப் போய் பயப்படுதுங்க
ஈழத்தமிழர் பிரச்னையில் சட்ட ரீதியாக காங்கிரஸ் அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காங்கிரஸ் சீனாவுக்கு பயந்து இலங்கையிடம் நட்பாக இருக்கிறார்கள்.
உசிலம்பட்டியைத் தாண்டி.. நாந்தேன்...
பார்வர்டு பிளாக் கட்சியை உசிலம்பட்டி தாண்டி யாருக்கும் தெரியாது இந்த கார்த்திக்தான் அந்த கட்சியை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்தவன்.
நான் போடுறேய்யா மேடையை.. வந்து பேசத் தயாரா...
பார்வர்டு பிளாக் கட்சியினர் இதை என்னுடன் நேருக்கு நேராக மேடை போட்டு பேச தயாரா? இல்லை நானே என் செலவில் மேடை போடுகிறேன் அவர்கள் வந்து விவாதம் செய்ய தயாரா ?
கண்டிப்பா நான் நிக்குறேன்..
அவர்கள் என்னை தேர்தல் நேரத்தில் மட்டும் வருகிறவன் என்று சொல்லி இருக்கிறார்கள் .இந்த தேனி தொகுதியில் கண்டிப்பாக நான் நிற்கிறேன் என்று சொல்லி நிறுத்தினார் கார்த்திக்...