ஆஸ்கரை கையில் ஏந்திய அந்த தருணம்.. குழந்தை போல் சிரித்து மகிழ்ந்த பெல்லி- பொம்மன்.. ஷேராகும் போட்டோ
ஊட்டி: ஆஸ்கர் விருதை கையில் ஏந்தியபடி முதுமலை காப்பகத்தின் யானை பராமரிப்பாளர்கள் பெல்லி- பொம்மன் தம்பதி புகைப்படம் அதிகமாக ஷேர் ஆகி வருகிறது.
முதுமலை பகுதியில் தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர்களாக இருப்பவர்கள் பெல்லி- பொம்மன் தம்பதி. இவர்கள் காட்டு நாய்க்கர் எனும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்.
இவர்களிடம் தாயை பிரிந்த ரகு, அம்மு எனும் இரு குட்டி யானைகள் பராமரிப்புக்காக வந்தன. இதில் ரகு மிகவும் சுட்டி. ஒரு நாள் பொம்மனுடன் இந்த சுட்டி பையன் ரகு சென்று கொண்டிருந்தான். அப்போது இயக்குநர் கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ் கண்களில் தென்பட்டனர்.

ஆவணப்படம்
இதையடுத்து தான் ஒரு ஆவணப்படம் தயாரிக்க விரும்புவதாகவும் இந்த காட்டில் தங்கி படம் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு பொம்மனும் பெல்லியும் எங்களுக்கு நடிக்கத் தெரியாது என்றனர். அதற்கு கார்த்திகி, நீங்கள் இயல்பாக இருங்கள். நடிக்க வேண்டாம், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

கார்த்திகி
அது போல் ஊட்டியை சேர்ந்த கார்த்திகி அந்த காட்டில் இரு ஆண்டுகள் தங்கியிருந்து 450 மணி நேரம் இந்த ஆவணப்படத்தை ஷூட் செய்துள்ளார். இதற்கு தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் என பெயரிட்டார். இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

ஆவணப்படத்திற்கு ஆஸ்கர்
தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் கிடைத்தது தமிழகத்திற்கே பெருமை என்பதால் அந்த படத்தை இயக்கிய கார்த்திகிக்கும், பொம்மன், பெல்லிக்கும், யானை ரகுவுக்கும் பாராட்டுகள் குவிந்தன. இவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அண்மையில் பொம்மன்- பெல்லி தம்பதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

ரூ 1 லட்சம்
அப்போது அந்த தம்பதிக்கு தலா ரூ 1 லட்சத்திற்கான காசோலையும் வனத்துறையில் பணியாற்றி வரும் 91 யானைப் பாகன்கள், அவர்களின் உதவியாளர்களுக்கு ஒரு லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அது போல் அந்த படத்தின் இயக்குநர் கார்த்திகி தலைமைச் செயலகத்திற்கு சென்று முதல்வர் ஸ்டாலினை பார்த்து பாராட்டுகளை பெற்றார். மேலும் ரூ 1 கோடி பரிசும், கேடயமும் முதல்வர் கொடுத்திருந்தார்.

ஆஸ்கர் விருது
கார்த்திகியும் ஆஸ்கர் விருதை முதல்வரிடம் கொடுத்து ஆசி பெற்றார். புகைப்பட பத்திரிகையாளரான கார்த்திகி வனவிலங்குகள், இயற்கை மீது அதீத ஆர்வம் கொண்டவர். இது போல் இயற்கைக்கும் இந்திய பழங்குடியின சமூகத்திற்கு உள்ள தொடர்பு குறித்து ஆவணப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஆஸ்கர் விருதுடன் பொம்மன் பெல்லி இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் கார்த்திகி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் குறித்து கார்த்திகி கூறுகையில் இந்த தம்பதியை பிரிந்து 4 மாதங்கள் ஆகிவிட்டன. நான் இப்போது என் குடும்பத்தை அடைந்தது போல் உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ரகு- அம்மு
யானை ரகுவையும் அம்முவையும் குழந்தை போல் பார்த்து வந்தனர் பொம்மனும் பெல்லியும்! இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த ரகுவை காண தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் குழுமியுள்ளனர். மேலும் பெல்லி பொம்மனையும் பார்க்க அவர்கள் ஆவலாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications