பட்டுன்னு பேசிட்டு டக்குன்னு தப்பிச்சா அது எச்.ராஜா.. ஆனா கருணாஸ் யார் தெரியுமா??
கருணாஸை போலவே எச்.ராஜாவையும் கைது செய்ய வேண்டும்.
சென்னை: ஒரு விஷயத்தில் கருணாஸை பாராட்டியே ஆகணும்.
எச்.ராஜா ஆகட்டும், கருணாஸ் ஆகட்டும், இருவருமே பேசியது தவறுதான். ஜனநாயக போக்கிற்கு எதிரானதுதான். அவதூறு வார்த்தைகளை கையில் எடுத்தவர்கள்தான்.
ஒருவர் மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசினார் என்றால் மற்றொருவர் மறுபுறம் சாதி கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசினார். இரண்டுமே மன்னிக்க முடியாத தவறு ஆகும். இரண்டுமே இளைய சமுதாயத்துக்கு தூவும் கொடிய நஞ்சு விதைகள் ஆகும்.

இன-மத கலவரம்
இதில் வித்தியாசம் என்னவென்றால், இதில் ஒருவர் இப்போதுதான் தன் இனவெறியை தமிழகத்தில் தூண்ட ஆரம்பித்தார். ஆனால் அதற்குள் இவ்வளவு பேசப்பட்டு கைதும் ஆகிவிட்டார். ஆனால் மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசிய மற்றொருவருக்கு இது முதல் முறை இல்லை. அதில் அவர் கைதேர்ந்தவர். கலவரத்தை ஏற்படுத்தி அதன்மூலம் குளிர்காய்ந்தவர். எனினும் கைது பற்றிய பேச்சு மூச்சையே இதுவரை காணோம்.

என் குரலே இல்லை
இவர்கள் இருவரின் விவகாரத்தில் மற்றொரு வேறுபாடு, எச்.ராஜா தான் என்ன பேசினாலும், அது நான் இல்லை என்பார், ட்விட்டரில் தவறாக யாரோ பதிவிட்டு விட்டார்கள் என்பார். அப்படி பேசியது நான் கிடையவே கிடையாது, டப்பிங், எடிட்டிங் என்று டெக்னாலஜியை உள்ளே புகுத்தி தப்பித்து கொண்டே போகிறார்.

பொய் சொல்லவில்லை
ஆனால் கருணாஸ், அது என் குரலே அல்ல என பொய் சொல்லவில்லை. அப்படி பேசியது நான்தான், அந்த பேச்சு யூ ட்யூப்பில் 45 நிமிடம் உள்ளது, முழுவதுமாக கேட்டுவிட்டு என் மீது என்ன தவறு என்று சொல்லுங்கள் என்றார். மேலும் தலைமறைவு என செய்தி வெளியானபோது, நான் எனது இல்லத்தில் தான் இருக்கிறேன், எங்கும் ஓடிவிடவில்லை என பகிரங்கமாக பேட்டி கொடுத்தார்.

வருத்தம் தெரிவித்தார்
மேலும் முதலமைச்சரை அப்படி பேசியதற்கு வருத்தமும் தெரிவித்தார். ஒருவேளை என்னை கைது செய்தால் அதனை சட்டப்படி சந்திப்பேன் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார். இப்படி கருணாஸ் பேசியது இயற்கையிலேயே இருக்கும் துணிச்சலா அல்லது பின்னணியில் யாரேனும் உள்ளார்கள் என்ற தைரியமா, தெரியவில்லை.

அபாயகரமானவர்கள்
கருணாஸ் முதலமைச்சரையும், காவல்துறையையும் மரியாதையின்றி பேசியதை ஏற்கவும் மன்னிக்கவும் முடியாது. அதேசமயம், கருணாஸ் மட்டுமல்ல, எச். ராஜா போன்றோரும் கூட சமுதாயத்திற்கு அபாயகரமானவர்களே!












Click it and Unblock the Notifications