வெள்ளம் பாதித்த பகுதிகளில் கருணாநிதி: நிவாரண உதவி வழங்கி ஆறுதல்
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். சென்னை சிந்தாதிரிபேட்டை நெடுஞ்செழியன் நகருக்கு சென்ற கருணாநிதி அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

வடகிழக்குப் பருவமழை கடந்த ஒருமாதகாலமாக சென்னையில் கொட்டி வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த மழையால் ஏரிகள் பெருகி, அதிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீர் குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளது. அரசியல் கட்சித்தலைவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பிரதமர் மோடியும் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். திமுக பொருளாளர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி இன்று நேரில் பார்வையிட்டார். சென்னை சிந்தாதிரிபேட்டை நெடுஞ்செழியன் நகருக்கு சென்ற கருணாநிதி அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார்.

இதனையடுத்து சைதாப்பேட்டைக்கு சென்ற அவர் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழைமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனை தொடர்ந்து கோட்டூர்புரத்திற்கு கருணாநிதி சென்றார். பலத்த மழையால் அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கும், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர் ஆறுதல் கூறினார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திமுகவினரும் பொதுமக்களும் வழங்கிய நிவாரண பொருட்களை வெள்ளம் பாதித்த மக்களுக்கு கருணாநிதி வழங்கினார்.












Click it and Unblock the Notifications