மதவாத அரசு அமைவதை எதிர்ப்பவர்கள்தான் திமுக அணியில் இடம் பெறுவர் - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi to address in Trichy confrence today
திருச்சி: சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிப்பவர்கள், மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை எதிர்ப்பவர்கள்தான் திமுக அணியில் இடம் பெற முடியும். அந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொள்பவர்கள்தான் திமுக தலைமையிலான அணியில் இடம் பெற முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திருச்சியில் நேற்று திமுகவின் 10வது மாநில மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பல்வேறு தலைவர்கள் பேசினர். இறுதியாக பொதுச் செயலாளர் அன்பழகன் உரை நிகழ்த்தினார்.

இதையடுத்து இன்று 2வது நாள் மாநாடு தொடங்கியது. காலை 9 மணிக்குத் தொடங்கிய மாநாட்டில் இன்று முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தம் 15 தீர்மானங்கள் போடப்பட்டது.

முன்னதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். பின்னர் மாலையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உரை இடம் பெற்றது. 9 மணியளவில் கருணாநிதி தனது சிறப்புரையைத் தொடங்கினார்.

கருணாநிதியின் பேச்சிலிருந்து...

நான் எத்தனையோ மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் இந்த மாநாடு போல பார்த்ததில்லை. இதற்கு முக்கியக் காரணம் கே.என். நேருதான். திமுகவினரிடையே காட்டிய அன்பை பார்க்கும் போது அவரை பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை. வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கின்றேன்.

தனது சகோதரரை அரசியல் விரோதிகளுக்கு பலிகொடுத்து விட்டு என்னிடம் அவர் தகவல் கூறிய போது, அவருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. அவரோ எனக்கு ஆறுதல் கூறினார். அவரை பாராட்டுவது என்னை பாராட்டுவது போலாகும். அவரை நண்பர் என்பதா, தம்பி என்பதா.. எப்படிச் சொல்வது.

மிகவும் முக்கியமான காலகட்டத்தில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு பின் லோக்சபா தேர்தல் என்ற முக்கிய பணி நமக்கு உள்ளது.

தமிழகத்தில் நடப்பதெல்லாம் திராவிட லட்சியங்களுக்கு எதிரான காரியங்கள்தான். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை, அரசியல் தரத்தை தாழ்த்தி குற்றச்சாட்டு, ஜனநாயக விரோத ஆட்சி தமிழத்தில் நடைபெறுகிறது.

உண்மையில் இங்கு நடைபெறுவது ஆட்சி அல்ல. காணொளி காட்சி. இதை எத்தனை நாள் அனுமதிக்கப்போகிறோம் என்பது தான் கேள்வி.

திமுகவின் தனிப்பட்ட தொண்டர்களைப் பழிவாங்குவதன் மூலமாக, திமுகவை யாராலும், எப்போதும் அழித்துவிட முடியாது.

ஜெயலலிதா ஆட்சியில் நடந்த அனைத்து வினோதங்கள் எல்லாம் கேலிக்குகரியது. அப்படியா என்று மூக்கில் விரல் வைக்கக் கூடியவை. எங்கேயாவது ஒரு குற்றவாளி குற்றம் சாட்டப்பட்டவர் எனக்கு இந்த நீதிபதி கூடாது இந்த நீதிபதிதான் வேண்டும் என்று தன் இஷ்டத்திற்கு ஒத்துழைத்தால்தான் நீதிமன்றத்திற்கு வருவேன் என்று சொன்னதுண்டா. ஜெயலலிதா சொன்னார்.ஜெயலலிதா ஆட்சியில் நடந்த அனைத்து வினோதங்கள் எல்லாம் கேலிக்குகரியது. அப்படியா என்று மூக்கில் விரல் வைக்கக் கூடியவை. எங்கேயாவது ஒரு குற்றவாளி குற்றம் சாட்டப்பட்டவர் எனக்கு இந்த நீதிபதி கூடாது இந்த நீதிபதிதான் வேண்டும் என்று தன் இஷ்டத்திற்கு ஒத்துழைத்தால்தான் நீதிமன்றத்திற்கு வருவேன் என்று சொன்னதுண்டா. ஜெயலலிதா சொன்னார்.

பெங்களூர் கோர்ட்டில் ஒரு மனு போட்டார்கள். அதில், என்னுடைய நகைகள், ஆபரணங்கள் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது. அதை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு வர வேண்டும் என்று மனு போட்டார்கள். அதை பெங்களூர் நீதிபதி விசாரணையைத் தொடங்கினார். தொடங்கியபொழுது, யாரிடத்தில் இந்த பொருள் எல்லாம் இருக்கிறது என்று விசாரித்தபோது பாஸ்கரன் என்று தெரிய வந்தது. ஆனால் பாஸ்கரன் இல்லை, இறந்து விட்டார். இறந்து விட்டவரை எப்படிக் கூப்பிட்டு பொருளையெல்லாம் ஒப்படைக்க முடியும். இதற்கான பதில் ஜெயலலிதாவின் வக்கீலுக்குத் தெரியாததல்ல. தெரிந்தும் கூட வாய்தா வாங்காலமே 10 நாட்கள் நீடிக்கலாமே என்று மனு போட்டார்கள்.

ஆனால் பாஸ்கரன் இறந்து போனதற்கான மரண சான்றிதழ் அதிகாரிகள் மூலமாக கொடுத்து இதோ பாருங்கள் அவர் உயிருடன் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இந்த நபர் இறந்து போய் வெகு நாளாகிறது என்று கூறிய பிறகு நீதிபதி அதைக் கண்டித்து இப்படி பொய் சொல்லி ஏமாற்றி வாய்தா வாங்கிடலாம் என்று நினைக்கிரீர்களா...இதை நான் சாதாரணமாக விட மாட்டேன். தீவிர நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்ன பிறகுதான் அதை விட்டார்கள். எனவே நீதிமன்றத்தில் வழக்குகளை இழுத்தடிக்க, என்னெல்லாம் ஜாலம் செய்ய முடியுமோ அவ்வளவு ஜாலங்களையும் இந்த சொத்துக் குவிப்பு வழக்கிலே ஜெயலலிதா செய்து வருகிறார். ஆனால், நீதி. நேர்மை, நியாயம் என்று பேசிக் கொள்கிறார். தொடர்ந்து நீதிமன்ற கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார் ஜெயலலிதா. பல ஆண்டுகளுக்கு வழக்கை இழுத்தடிப்பதிலே ஜெயலலிதா வல்லமை பெற்றவர் ஆவார்.

சேது சமுத்திரத் திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களால் கனவுத் திட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதையே நிறைவேற்ற முடியாது என்று சுப்ரீம் கோர்ட் வரை சென்று, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்கு வாய்தா கேட்டதன் காரணமாக, சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்படாமல், மத்திய அரசு ஆதரவு தெரிவித்தும் கூட 1000 கோடிக்கு மேல் செலவழிக்கக் கூடியதிட்டத்திற்கு, மத்திய அரசு குரல் கொடுத்தும் கூட நிறைவேற்றப்படக் கூடாது என்பதில் அழுத்தம் திருத்தமாக ஜெயலலிதா இருப்பதன் நோக்கம் என்ன... எதற்காக வேண்டாம் என்கிறார்.

இது அண்ணா அறிவித்த திட்டம்தானே.. அந்தக் கட்சிக்குப் பெயர் அண்ணா திமுக. 67ம் ஆண்டு ஆ்ட்சிப் பொறுப்பேற்ற போது சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தினார். பின்னர் எனது ஆட்சிக்காலத்தில் சோனியா காந்தியும், பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விழாவுக்கு வந்து சேது சமுத்திரத் திட்ட ஆரம்ப விழா நடைபெற்று, தடை விதிக்கக் கோரி , தடை விதிக்கப்பட்டு இன்றைக்கு அத்திட்டம் தமிழகத்திலே நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

உண்மை என்ன... நாம் அறிவித்த திட்டம் என்பதால் அதை நிறைவேற்றாமல் செய்ய வேண்டும் என்பது ஜெயலலிதாவின் விருப்பம். அண்ணா அறிவித்த திட்டம் என்றால், அண்ணா என்ன அறிவிப்பது, எங்க அம்மா அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வார்கள்.

இப்படிப்பட்ட ஜெயலலிதாவா தமிழகத்தை முன்னேற்றப் போகிறார். இவராலா தமிழகம் முன்னேறப் போகிறது. இவரா தமிழர்களைக் காப்பாற்றக் கூடியவர். தமிழகம் முன்னேறுவதைத் தடுக்கும் முதல்வர் இவர். உண்மை என்னவென்றால், யாரையோ திருப்திப்படுத்த ஜெயலலிதா இந்தத் திட்டமே வேண்டாம் என்கிறார்.

கடந்த சில தேர்தல் அறிக்கைகளில், அதிமுக வெளியிட்ட அறிக்கைகளிலேயே அதைச் சொல்லியிருக்கிறார்கள். சேது சமுத்திரத் திட்டம் அதிமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் என்று சொல்லியுள்ளனர். தமிழகத்திற்குப் பெரும் பலன் விளையும் என்று சொல்லியது ஜெயலலிதாதான். ஆனால் நமது கழக அரசு மன்மோகன் சிங், சோனியா்வை அழைத்து ஆரம்ப விழா நடத்திய பிறகு, ஆட்சி மாறியது. அதன் பிறகு அவர்களது ஆட்சி வந்தது. வந்ததும் முதல் காரியமாக சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடை பெற்றார்கள். வேறு வழியில்லாமல் உச்சநீதிமன்றமும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இன்று பேசிய தலைவர்கள் எல்லாம் சொன்னார்கள், கூட்டணி குறித்துப் பேசினார்கள். இன்று நம்முடன் இருக்கும் தோழமைத் தலைவர்களில் சிலர் அங்கிருந்து வந்தவர்கள்தான். அவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிப்பவர்கள், மதவாத்தை எதிர்ப்பவர்கள், சமூக நீதிக்காக குரல் கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் நான் தேர்வு செய்து சேர்த்திருக்கிறேன்.

இதேபோல மற்றவர்களும் முன்வருவார்களானால், இந்த அணி பேரணியாக மாறும். அந்த அணியில் இருக்கின்றவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிப்பவர்களாக, மதவாதிகளை ஆதரிக்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொண்டவர்களாக இருப்பார்கள். மதவாத அரசு உருவாவதற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று உறுதியுடன் இருப்பார்கள்.

இந்த நிபந்தனைகளையெல்லாம் ஏற்றுக் கொண்டு வருபவர்கள்தான் இந்த அணியில் இடம் பெற முடியும். இங்கே தோழமைக் கட்சகித் தலைவர்கள் எல்லாம் காலையிலும், மாலையிலும் பேசும்போது சொன்னார்களே, சமூக நீதிக் கொள்கைக்கும், திராவிட இயக்கத்தின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும், ஆதரவு தருபவர்கள்தான். அப்படிப்பட்டவர்கள்தான் இந்த அணியிலே இடம் பெறுவார்கள்.

முற்போக்குக் கூட்டணியாக திமுக தலைமையில் அமையும் அணியாக இது இருக்கும். அந்த அணி வெற்றி பெற ஜெயலலிதாவால் பிடித்த பிணி தீர இந்த மாநாட்டிலே குழுமியிருக்கிற உங்களையெல்லாம் அழைக்கிறேன். தொண்டாற்றுங்கள் என்று.

இந்த அணி வெல்லப் போவது உறுதி. அந்த வெற்றிக்குக் காரணகர்த்தாக்களாக இங்கே கூடியிருக்கிற கூட்டணிக் கட்சிகளுடன் தோளோடு தோள் சேர்ந்து இந்தத் தேர்தலில் திமுக தன்னுடைய கடமையை ஆற்றும். அதன் தொடர்ச்சியாக தமிழகம் செழிப்பதற்கும், இந்தியாவிலே ஜனநாயகம் தழைப்பதற்கும் காரணகர்த்தாக்களாக ஆவோம். அதற்கு எல்லோரும் ஏற்புடையவர்களாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டு, அருமைத் தம்பி நேருவுக்கும், நேருவோடு சேர்ந்து பணியாற்றிய தொண்டர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+