அதிமுக ஆட்சிக் காலத்தில் அவசர கோலத்தில் பல கோடி பேரங்களுடன் கடைசிநேர நியமனங்கள்
கேள்வி : பதிவுத் துறையில் ஆயிரம் காலிப் பணி இடங்களுக்கு 29-2-2016 அன்று நேர்காணல் என்றும், 4 லட்சம் ரூபாய் வீதம் வசூல் என்றும் செய்தி வந்ததே?
கருணாநிதி: தேர்தல் அறிவிப்பு வரவிருந்த நிலையில் இந்தச் செய்தி வந்தது. அறிவிப்பு வருவதற்குள் சுருட்டியது வரை இலாபம் என்ற போக்கில் ஒவ்வொரு துறையிலும் இது சுனாமி வேகத்தில் நடைபெற்றது. அவசர அவசரமாக தேர்வாணையக் கழகத்தில் பல மாதங்களாக காலியாக இருந்த உறுப்பினர் பணி இடங்கள் நிரப்பப்பட்டன. அது போலவே பல்வேறு பல்கலைக் கழகங்களில் காலியாக இருந்த துணை வேந்தர் பணி இடங்கள் நிரப்பப்பட்டன. எல்லாம் பல கோடிக்கணக்கில் விலை போயின என்றும் பேசப்பட்டது.
செய்தித் துறையில் 40 ஏ.பி.ஆர்.ஓ. பதவிகளை உருவாக்கி, வேண்டியவர்களையெல்லாம் அதிலே நியமனம் செய்திருக்கிறார்கள். ஏன், சட்டப்பேரவையிலே கூட காலி இடங்கள் இருப்பதாகக் கூறி ஒரு பதவிக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் வசூல் செய்துகொண்டு நியமனம் செய்திருக்கிறார்களாம். அந்த வரிசையில் தான் பதிவுத் துறையில் நேர்காணல் என்ற செய்தியும் வந்தது. பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்களின் ஊழல் பட்டியலில் முதல் இடம் பிடித்தவருக்கு தலைமைப் பொறியாளர் பதவியாம்! "வழக்கத்தில் உள்ள நடைமுறைகளை மீறி, அவசர கதியில் நியமன நடவடிக்கைகள் எடுக்கப்படுவது பல சந்தேகங்களை எழுப்புவதாக பலரும் புகார் தெரிவித்து உள்ளனர்" என்று "தினமலர்" நாளேடே முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இப்படிப்பட்ட கடைசி நேர நியமனங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் உருவாகாதா?